ரமழான் மாதத்தில் அதிகமதிகம் ஸதகா செய்வோம்

(முஹம்மது வஸீம் ஹுஸைன்) 
தற்போதைய காலகட்டத்தில் உலகமெங்கும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் சிறப்பு பொருந்திய மாதமாகிய ரமழானில் நோன்புநோற்று நன்மையான காரியங்களில் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறோம். இரவில் நின்று வணங்குதல்,சுன்னத்தான தொழுகைகளை பேணி நிறைவேற்றுதல், என நன்மைகளை கொள்ளையடிக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ். 

அதேரமழான் மாதத்தில் இஸ்லாம் மிகமுக்கியமான ஸதகா என்ற இபாதத்தை செய்யுமாறு எமக்கு வலியுறுத்துவதை பார்க்கலாம். இந்த ஸதகாவை பொறுத்தவரையில் பணக்காரன், ஏழை, என்ற வித்தியாசமின்றி எந்த நேரத்திலும் எந்தப் பொருளையும் கொடுக்க முடியும். ஸதகா செய்கின்ற போது அது மனிதனுடைய பொருளாதாரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துவது மட்டுமன்றிபிறருடைய கஷ்டத்தில் பங்கெடுத்தமைக்காக இறைவனிடத்தில் மிகப் பெரிய நற்கூலியும் உண்டு என்பதும் மிகப் பெரும் உண்மையாகும். ஸதகா கொடுக்கின்ற போது எடுப்பவரும்,வழங்குபவருக்குமிடையே மனரீதியான ஒற்றுமை ஏற்படுவதை அவதானிக்கலாம். குரோதம்,காழ்ப்புணர்வு போன்ற தீய எண்ணங்கள் ஒரு மனிதன் குடும்ப உறுப்பினருக்காக ஸதகா செய்யும் போது நீங்குவதை அவதானிக்கலாம். 

ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என்னுடைய தாய் திடீரென்றுமரணித்துவிட்டார்.அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல (தர்ம) காரியம்செய்திருப்பார். எனவே,அவருக்காக நான்தர்மம்செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?' என்றுகேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' என்றார்கள். 

(புஹாரி 1388) 

மேலுள்ள செய்தியில் மரணித்த எமது உறவுகளுக்காக நாம் ஸதகா செய்கின்ற போது நிச்சயமாக அல்லாஹ் அதனை ஏற்றுக் கொள்வான் என நபியவர்கள் கூறியுள்ளார்கள். எனவே புனித மிகு ரழமான் மாதத்தில் நாம் எம்மை விட்டுப் பிரிந்த உறவுகளுக்காக வேண்டி ஸதகா செய்கின்ற போது அது மரணித்த உயிர்களுக்கும் கப்ரில் பயனளிப்பதோடு வழங்கிய எமக்கும் நன்மை இருக்கின்றது. 

ஆனால் இன்று எம்மில் பலர் ஸதகா என்ற இபாதத்தை வெறும் சில்லறைக் காசுகளுக்குள் மாத்திரம் சுருக்கிக் கொண்டுள்ளதை பார்க்கிறோம். வீட்டிற்கு பிச்சை கேட்டு வருபவர்களுக்கு 05 அல்லது 10 ரூபாக்களை வழங்கிய பின்னர் ஸதகா செய்து விட்டதாக நாமே நமக்குள் ஓர் வட்டத்தை உருவாக்கி இஸ்லாம் ஏவிய ஸதகாவை செய்யாது விடுகிறோம். இது மாபெரும் தவறாகும். ஸதகா என்பது கேட்டு வருபவர்களுக்கு கொடுக்கும் பிச்சையன்று. மாறாக தேவையுடைய மக்களை இனம் கண்டு இறைவனுடைய திருப்தியை மாத்திரம் நாடி செய்யப்படுவதே ஸதகா ஆகும். இவ்வாறு நாம் ஸதகா செய்கின்ற போது அது அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய முஃமினாக எம்மை தரமுயரத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மம்செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒருகாலம் வரும். அப்போது ஒருவன்தன்னுடைய தர்மப் பொருளை எடுத்துக் கொண்டுஅலைவான்; அதைப் பெறுவதற்கு யாரும் இருக்க மாட்டார். அப்போது ஒருவன், நேற்றேஇதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அதுஎனக்குத் தேவையில்லையே! என்றும் கூறுவான்.' 
ஹாரிஸா இப்னு வஹ்ப்(ரலி) அறிவித்தார்கள். 

(புஹாரி1411) 

மேலுள்ள நபி மொழியானது எதிர்காலத்தில் ஸதகா என்ற ஒரு மகத்துவம் மிக்க இபாதத் ஒன்று எம்மை விட்டும் அகலக் கூடிய நிலை ஏற்படும் என்பதை சூசகமாக குறிப்பிடுவதை அவதானிக்கலாம். எனவே கால நேரம் பாராது செய்ய வேண்டிய ஸதகாவை நாம் இன்னும் இன்னும் தாமதப்படுத்தாமல் இக்கணமே நிறைவேற்ற தயாராக வேண்டும். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்கள். (புஹாரி 1417) 

இச் செய்தி ஸதகா செய்வது எம்மை நரகில் இருந்து பாதுகாப்பதாக நபியவர்கள்கூறியுள்ளார்கள். நாம் செய்கின்ற ஸதகா நரகில் இருந்து எமக்கு விடுதலையளிக்ககூடிய ஓர் அமல் என்பதால் அதனுடைய மகத்துவமும் தாற்பாரியமும் அளப்பரியது.

மேலும் நபியவர்கள் ஸதகாவை விரைவு படுத்தி செய்யுமாறு ஏவுவதை பலஇடங்களில் பார்க்கலாம். குறிப்பாக மரணம் வரும் வரை கொடுக்கலாம் என வைத்துவிட்டு உயிர் தெண்டைக் குழியை அடையும் வரை காத்திருந்து வழங்குவதில் எந்தப்பயனுமில்லை. இதனை கீழ் கண்ட நபி மொழி எச்சரிப்பதை அவதானிக்கலாம். 

அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அதிகநன்மையுள்ளதர்மம்எது?' எனக் கேட்டார். 'நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள்தேவைஉடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசைஉள்ளவராகவும்இருக்கும் நிலையில்தர்மம்செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம்செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம்.அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும்அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்றுஆகிவிட்டிருக்குமே!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 1419) 

ஆரோக்கியமானவராக இருக்கின்ற நிலையில் செய்கின்ற ஸதகாவிற்கும் வறுமைக்கு பயந்து அதிகமாக செல்வத்தை சேகரிக்கின்ற நிலையிலும் நாம் ஸதகா செய்கின்ற போது தான் அல்லாஹ் எதிர்பார்க்கின்ற கொடையாளிகளாக நாம் மாற முடியுமே தவிர மற்ற நேரங்களில் செய்யும் ஸதகா எம்மை சில வேளைகளில் முகஸ்துதிக்காக செய்கின்ற நிலையை ஏற்படுத்தலாம். 

நாளை மறுமையில் நிழலே இல்லாத மஹ்ஷர் பெருவெளியில் அல்லாஹ் 07கூட்டதாருக்கு நிழல் வழங்குகிறான். அதில் ஸதகா செய்பவர்களும் அடங்குகின்றனர். இது அல்லாஹ் ஸதகா செய்பவர்களுக்கு வழங்குகின்ற மிகப் பெரிய வெகுமதியாகும். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடையநிழலில்அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்: நீதிமிக்கஅரசன்.அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன்.பள்ளிவாசல்களுடன்பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன். அல்லாஹ்வுக்காகவேநேசித்து, அவனுக்காகவேஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர், அழகும்அந்தஸ்தும் உள்ள ஒரு பெண்தன்னை (தவறுக்கு) அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்' எனக்கூறியவன். தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாகதர்மம்செய்பவன், தனித்திருந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோராவர்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். 

(புஹாரி 1423) 

எனவே ஸதகா செய்வதற்கு ஏழைகள் எங்குள்ளனர் என தேடித்திரிய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கணவன் தன் மனைவி மக்களுக்காக செய்கின்ற செலவீனங்கள் கூட ஸதகாவாகும். அந்த அடிப்படையில் கணவனாக இருக்கின்றவர்கள் தனது மனைவி மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலமாக நன்மைகளை அடையலாம். குடும்பத்தில் எம்மை விட வசதி குறைந்த சொந்தங்கள் இருக்கலாம் அவர்களுக்காக ஸதகா செய்யலாம். எமது நண்பர்கள் கஷ்டத்தில் இருக்கலாம் அப்போது இறைவனின் கூலியை எதிர்பார்த்து மாத்திரம் ஸதகா செய்கின்ற போது அல்லாஹ்விடத்தில் நாம் உயர்ந்தவர்களாக காணப்படுவோம். 

மேலும் நம்மில் சிலர் பிரதி பலனை எதிர்பார்த்து ஸதகா செய்வதை பார்க்கிறோம். உதாரணமாக திருமண பந்தத்தில் இணைந்த நண்பர்களுக்கு 5000 ரூபாய் நாம் அன்பளிப்பாக வைத்து விட்டு எமது குடும்ப நிகழ்வுகள் என்று வருகின்ற போது அவன்10,000 ரூபாய் வைப்பான் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்கின்றோம். இது எந்தவகையான ஸதகா சகோதரர்களே! இது தான் இஸ்லாம் சொல்லும் ஸதகாவா?இப்படியான நடைமுறை எமது உறவுகளுக்கிடையே பல விரிசல்களையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துமே தவிர வேறொன்றும் இதில் கிடையாது. இப்படியான செயற்பாடுகளால் அதிகமாக அன்பளிப்பு செய்ய முடியாமல் திருமண நிகழ்வுகளுக்கு செல்லாமல் குடும்ப உறவுகள் முறிக்கப்பட்ட சம்பவங்களே அதிகம் நிகழ்ந்துள்ளன. இவ் விடயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். 

இறுதியாக அல்லாஹ் கூறுகிறான். 

நம்பிக்கையாளர்களே! (தர்மம்செய்யக் கருதினால்) நீங்கள் சம்பாதித்தவைகளிலிருந்தும்,நாம் உங்களுக்குப்பூமியிலிருந்து வெளியாக்கிய (தானியம், கனிவர்க்கம் ஆகிய)வைகளிலிருந்தும்நல்லவைகளையே (தர்மமாக) செலவு செய்யுங்கள். அவைகளில் கெட்டவைகளைக் கொடுக்கவிரும்பாதீர்கள். (ஏனென்றால், கெட்டுப்போன பொருள்களை உங்களுக்கு ஒருவர்கொடுத்தால்) அவைகளை நீங்கள் (வெறுப்புடன்) கண் மூடியவர்களாக அன்றி வாங்கிக்கொள்ள மாட்டீர்களே! (ஆகவே, நீங்கள் விரும்பாத பொருள்களை பிறருக்குதர்மமாகக் கொடுக்காதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவன், மிக்கபுகழுடையவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். 

மேலுள்ள வசனம் ஸதகா எப்படி கொடுக்க வேண்டும் என கூறுவதை பார்க்கலாம். சிலர் ஸதகா செய்கின்றனர். ஆனால் அதில் குறைகள் இருக்கின்றன. ஆடைகளை அன்பளிப்புச் செய்கின்றனர். அதனை அவர்கள் விரும்பாமல் பழையது தானே என கொடுக்கின்றனர். இப்படியான ஸதகாக்கள் மூலம் எவ்வித பயனுமில்லை. எனவே நாம் விரும்பாத நமக்கு தற்போது தேவையற்றது என்ற பொருட்களை தர்மமாக கொடுக்காதீர்கள். நமக்கு அத்தியவசியமானவை மற்றும் நமக்கு பயன்படுகின்ற பொருட்களை ஸதகா செய்யுங்கள். அதுவே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஸதகாவாக மாறும். 

ஒரு மனிதன் மரணித்தால் அவனது கப்று வாழ்க்கையில் பயனளிக்க கூடியவற்றில் அவன் செய்த நிலையாக ஸதகாவும் ஒன்றாகும். எனவே இஸ்லாம் எதிர்பார்க்கும் வகையில் எமது ஸதகாக்களை வழங்கி நன்மைகள் அதிகம் பொருந்திய இம் மாதத்தில் அதிகம் ஸதகா செய்த மக்களாக நாமும் மாற வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாக...

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget