இலங்கைச் சோனகர்களின் பூர்வீகம் (வரலாற்றாவணம்)

(தொடர் 03)
இலங்கைத் திருநாட்டின் பூர்வீகக் குடிகளான முஸ்லிம்களின் மத சுதந்திரத்தை அடக்குகின்ற, முஸ்லிம்களின் கலாசார தனித்துவத்தை கேலிக்கூத்தாக்குகின்ற, முஸ்லிம்களின் வரலாற்றைத் திரிவுபடுத்துகின்ற கைங்கரியத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுகுழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வரலாற்றுக் காலம் தொட்டு இற்றைவரை இந்த நாட்டுக்காக தியாகம் செய்த, செய்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்களின் வரலாற்றைத் திரிவுபடுத்துவதில், முஸ்லிம்களை வந்தேறு குடிகளாக, வரலாறு அற்றவர்களாக சித்தரிப்பதற்காக கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுகின்றனர்.

தன் வரலாற்றை, பூர்வீகத்தை அறிந்து கொள்ள, ஆவணமாக்க தவறும் ஒரு சமூகம் எதிர்காலத்தில் தம் இருப்பையும் அடையாளத்தையும் இழக்க ஆரம்பிப்பதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்துகின்றது.

எமது அண்டைநாடான இந்தியாவில் இராமர் கோயிலை உடைத்துவிட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்கின்ற சரித்தப்புரட்டே பாபர் மசூதி உடைக்கப்படுவதற்கு வழிகோலியது.

இந்த சரித்தரப் புரட்டுக்களுக்கு தக்க பதில்களை நம்மவர்கள் பதிவுசெய்யத் தவறின், நாளை சரித்தரப் புரட்டுக்கள் சரித்திரமாகி எமது சமுதாயத்தின் வரலாறு ஓரிரு நூற்றாண்டுகளுக்குள் கட்டுண்டுவிடும்.

இந்த அடிப்படைகளை மனதில் இறுத்தியவர்களாக, வரலாற்றுப் பக்கங்களை சற்றுப் புரட்டிப் பார்ப்போம். இலங்கையின் வரலாற்று நூற்களில் முன்னிலைப்படுத்ப்படும் ஒரு நூல் ‘மகாவம்சம்’ (Mahawamsa or Mahawansa) ஆகும். 


மகாவம்சம் இலங்கையின் வரலாற்று நூலாக பெரும்பான்மை இனத்தவர்களால் அடையாளப்படுத்தப்பட்டாலும், அதனை முழுமையான ஒரு வரலாற்று ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும், அது பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி பௌத்த பிக்குகளினால் கி.பி. 6ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட ஒரு நூல் என்பதை விக்கிபீடியா கலைக்களஞ்சியம் உறுதி செய்கின்றது.

“மகத நாட்டில் உருவெல எனும் இடத்தில் அரச மரத்தடியில் புத்தர் அமர்ந்திருந்த வேளை; ‘பௌத்தம் வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கை என்றும், இலங்கையின் பூர்வீகக் குடிமக்களான இயக்கர்களை அங்கிருந்து அகற்றி, இலங்கையில் பௌத்த மதத்தை தோற்றுவித்து, புனிதப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் புத்தருக்கு புலனாகுகிறது’ எனும் மகாவம்சம் குறிப்பிடும் பௌத்த கருத்துருவாக்கமே இலங்கை தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது எனும் எண்ணக்கரு சிங்கள மக்களின் மனங்களில் ஆழப்பதிந்து போயுள்ளமைக்கான காரணமாகும்.

விஜயனும் அவனது 700 தோழர்களும் இலங்கைக்கு வருகை தந்ததிலிருந்து தங்களது வரலாறு தொடங்குவதாகவும், முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் என்றும் இலங்கை முஸ்லிம்கள் வெறும் 200, 300 வருட வரலாறே கொண்டவர்கள் என்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிறுகுழுவினரால் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

விஜயன் எனும் ஒருவரின் வருகைத் தொடர்பான சான்றுகளோ, அப்படி ஒருவன் இலங்கையை ஆட்சி செய்தமைக்கான எவ்வித ஆதாரங்களோ எங்கும் இல்லை. மாறாக, விஜயனை இலங்கையின் முதல் அரசனாக சித்தரிக்கும் மகாவம்சத்திலேயே விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையின் பூர்வீகக் குடிகள் அரசமைத்து வாழ்ந்ததற்கான குறிப்புகள், இலங்கையின் முதல் அரசன் விஜயன் எனும் கூற்றை நம்பகமற்றதாக செய்கின்றது என விக்கிபீடியா கலைக்களஞ்சியம் கூறுகின்றது.

மேலும், மகாவம்சத்தின் அடிப்படையில் இலங்கைத் திருநாட்டின் வரலாற்றுப் பக்கங்களை புரட்டினால் கூட இலங்கைக்கு விஜயன் வந்ததாக சொல்லப்படுகின்ற காலப்பகுதியிலேயே இலங்கையில் வேறுபட்ட கலாசார விழுமியங்களை பின்பற்றக் கூடிய இலங்கையின் பூர்வீகக் குடிகள் வாழ்ந்துள்ளமையை அவதானிக்க முடியும்.

அடுத்து, “யோனக –Moors – சோனகர்” என அடையாளப்படுத்தப்படும் முஸ்லிம்கள் குறித்த வரலாற்றுப் பக்கங்களை புரட்டுவோமானால், இலங்கைத் திருநாடு சோனகர்களின் தாய்நாடு. இலங்கைச் சோனகர் இந்த நாட்டின் பூர்விகக் குடிகள். மாறாக, வர்த்தக நோக்கத்திற்காக இலங்கைக்கு வந்த அராபியரின் வாரிசுகள் கிடையாது என்பதை கண்டு கொள்ளலாம்.

இன்று பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்ற வரலாற்று பாடப்புத்தகங்கள் குறிப்பிடுவது போன்று கி.பி.8ம் நூற்றாண்டில் வர்த்தக நோக்கத்திற்காக வந்த அராபியரின் வாரிசுகள் அல்ல இந்த சோனகர். மாறாக, இலங்கைச் சோனகர் என்பவர்கள் இந்த நாட்டின் தனித்தவொரு தேசிய இனம் (Nation) என்பதை வரலாறு நமக்கு உணர்த்தி நிற்கின்றது.

இலங்கைச் சோனகர் என்பவர்கள் வர்த்தக நோக்கத்திற்காக வந்த அராபியரின் வாரிசுகள் என்று வாதிடுவதாக இருந்தால் அதற்குரிய வரலாற்றுச் சான்றுகள் இருந்தாக வேண்டும். குறைந்த பட்சம் உடல் அமைப்பு, உணவுப் பழக்க வழக்கம் போன்றவற்றிலாவது அராபியரை ஒத்திருக்க வேண்டும். சோனகப் பெண்களின் வீட்டு மொழியாகவேனும் அரபு மொழி இருக்க வேண்டும். இவை எதுவுமே இல்லை என்பது இலங்கைச் சோனகர் என்பது அரபிகளின் வாரிசுகள் அல்ல என்பதை நிரூபித்து நிற்கின்றது.

மேலும், வர்த்தக நோக்கத்திற்காக இலங்கைக்கு வந்த அராபியர் தம்மோடு அராபிய பெண்களை அழைத்து வந்ததாகவும், அவர்கள் மரணமடைந்த போது அப்பெண்கள் அரபுநாடுகளுக்கு திருப்பி அனுப்பபட்டதாகவும் வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அடுத்து, மனிதகுல நாகரீக வரலாற்றின் பக்கம் சற்று நோக்குவோமானால், ஆரம்ப கால குடியேற்றங்கள் நீர்நிலைகள், விவசாய நிலங்களை அண்மித்ததாக அமைக்கப்பட்டதை அறிந்து கொள்ளலாம். அது போன்று இலங்கைத் திருநாட்டின் குடியேற்றப் பரம்பலை சற்று அவதானிப்போமாயின் சிங்களவர்கள் தமது பெரும்பான்மை வாழ்விடத்தை தெற்கிலும், தமிழர்கள் வடக்கிலும் அமைத்திருக்க இலங்கைச் சோனகர்கள் நீர் நிலைகளை அண்டிய பிரதேங்களிலும், விவசாய நிலங்களுக்கு அருகாமையிலும் தமது குடியேற்றங்களை அமைத்திருப்பதிலிருந்தும் காலம் காலமாய் இலங்கையில் வாழ்ந்து வரும் ‘இலங்கையின் பூர்விகக் குடிகளே இலங்கைச் சோனகர்’ என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆனால், இலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலானோரைப் பொறுத்தவரை கி.பி 8-9 ம் நூற்றாண்டில் வர்த்தக நோக்கத்திற்காக இலங்கைக்கு வந்த அராபிய வழித்தோன்றல்களே முஸ்லிம்கள் என அடையாளப்படுத்த விளைகின்றனர். இவ்வாறு அடையாளப்படுத்துவதனூடாக இந்த நாட்டின் பூர்விகக் குடிகளான நாம் எமது வரலாற்றுத் தனித்துவத்தை எட்டாம் நூற்றாண்டுக்குள் வரையறுத்துக் கொள்ள வேண்டிய துரதிஷ்டமான நிலைதோன்றும்.

அதுமாத்திரமன்றி, இன்றைய நிலையில் சோனகர்களின் வரலாற்றைத் திரிவுபடுத்த புறப்பட்ட பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒரு சிறுகுழுவினரோ முஸ்லிம்கள் வெறும் 200, 300 வருட வரலாறே கொண்டவர்கள் என்று இலங்கையின் பூர்விகக் குடிகளின் வரலாற்றை, சரித்தரத்தை தலைகீழாகப் புரட்டப் பார்க்கின்றனர்

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, வாழ்வியல் குறித்து ஆய்வு செய்த கலாநிதி அனஸ் அவர்கள், இலங்கையில் முஸ்லிம்கள 1300 வருடங்களுக்கு முன்பிருந்தே வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதற்கு சான்றாக, காலியில் உள்ள “கச்சு வத்த” என்ற இடத்தின் உண்மையான பெயர் “ஹஜ்ஜு வத்தை” என்றும் ஹஜ்ஜுக்கு செல்லும் முஸ்லிம்கள் 1300 வருடங்களுக்கு முன்னர் இங்கிருந்துதான் தனது பயணத்தை மேற்கொண்டார்கள் எனக் குறிப்பிடுகின்றார்.-

மேலும், பராக்கிரமபாகு மன்னனின் ஆட்சிக் காலத்தில் (1505) இலங்கையின் கடல் வர்த்தகம் முழுக்கவும் ‘சோனகர்கள்’ என்று நாட்டில் அறியப்பட்டிருந்த பூர்வீகக் குடிகளிடமே இருந்ததாகவும் அவர்களது தயவில் அரேபியரின் செல்வாக்கும் அங்கு பரவலாகக் காணப்பட்டதாகவும் வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதுமாத்திரமன்றி, இலங்கை அரச மரபின் நான்காவது அரசனும், பண்டுவாசுதேவனின் மகள் வழிப் பேரனுமான ‘பண்டுகாபய’ மன்னன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் சோனகர்களுக்கு இடம்வழங்கியதாக மகாவம்சத்தை மேற்கொள்காட்டி வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே, மகாவம்சம் தருகின்ற தகவலின்படி குறைந்ததது 2300 வருடங்களுக்கு முன்னரே இலங்கையில் சோனகர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பது நிரூபணமாகின்றது.

இதனால்தான் முதலாவது இலங்கைப் பிரதமரான டி.எஸ் சேனாநாயக்க போன்ற தலைவர்களே நேர்மையாக, இலங்கைத்திரு நாட்டில் சிங்கள இனம் வாழும் கால அளவிற்கு யோனக மக்களின் வரலாறும் இருக்கிறது என்பதை ஏற்றிருக்கின்றார். (The Sunday Times Plus Magazine, 1 February 1998. 50 Years (Freedom) Anniversary Edition.)

குளோடியஸ் தொலமி இலங்கையில் வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ‘சோனர்’ எனத் தன் வரலாற்றுக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதோடு தன் வரைபடத்தில் ‘சோனா நதி’ என ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தையும் வரைந்திருப்பதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். -The Moors in Spain : by M. Florian (1910)-

அதே போன்று, கிரேக்க மாலுமி “ஓனோஸ் கிறிட்டோஸால்” என்பவரால் கி.மு 326ல் வரையப்பட்ட இலங்கை வரைபடத்தில் புத்தளம் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் ‘சோனாள்களின் குடியேற்றம்’ பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாக கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் ‘புத்தளம் முஸ்லிம்கள் வரலாறும் வாழ்வியலும்’ என்கின்ற தனது நூலில் பக் 5-8ல் குறிப்பிடுகின்றார்.

கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்துக்குரிய இக்குறிப்பை தழுவிய தொலமியின் வரலாற்றுக்குறிப்பிலிருந்தும் பார்க்கும் போது இலங்கைச் சோனகர்களின் வரலாறு கிட்டத்தட்ட 2500க்கு மேற்பட்ட கால வரலாற்றை உடையது என்பதையும் சோனகர்கள் இலங்கையின் பூர்விக குடிகள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

அதேவேளை, இலங்கையின் வரலாறு தொடர்பாக எழுதிய வரலாற்றாசிரியர்கள் இலங்கையின் பூர்விக் குடிகளை பிரதானமாக இயக்கர், நாகர் என வகைப்படுத்தப்படுகின்றார்கள். இதில் ‘யக்கா’ இனத்தினர் என மகாவம்சம் குறிப்பிடுகின்ற இயக்கர் இனத்தினர் குழுமி இருந்த இடத்திற்கு ஆகாய மார்க்கமாக சென்ற புத்தர், இருட்டு, மழை, இடி, புயல் போன்றவற்றை செயற்கையாக உருவாக்கி அவர்களுடைய மனதில் பீதியை எழுப்பி, பௌத்தர்களாக மதம்மாற்றியதாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது.

இலங்கையின் மற்றொரு பூர்விகக் குடிகளான நாகர்கள் பற்றிய வரலாற்றுச் சான்றுகள் பிற்காலத்தில் மறைக்கப்பட்டு விட்டன. எனவே, நாகர்கள் குறித்த வரலாற்றுப் பக்கங்களை ஆய்வு செய்யும் போது சோனகர்களின் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட வரலாறு, தமிழ் மொழியின் இலங்கை வருகைக்கும், சோனகர்களுக்கும் உள்ள தொடர்பு, தமிழ்ப் பெண்களை அரேபியர் திருமணம் செய்ததன் விளைவாக உருவானதல்ல சோனக சமுதாயம் என்பது போன்ற பல மறைக்கப்பட்ட உண்மைகளை கண்டு கொள்ள முடியும் என்பது எனது பணிவான கருத்ததாகும்.

இவ்வாறாக, இலங்கையின் பூர்விக குடிகளாக வாழ்ந்து வருகின்ற சோனக சமுதாயத்தின் வரலாறு, அவர்கள் பேசியதாக நம்பப்படுகின்ற ‘அர்வி’ மொழி என்பவற்றை கவனமாக நன்கு திட்டமிட்ட வகையில் அழித்தவர்கள் ‘போர்த்துக்கேயர்கள்’ என வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

போர்த்துக்கேயர் ‘சோனக’ சமுதாயத்திற்கெதிராக இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டதற்கு காரணமாக அமைந்தது அவர்கள் ஆபிரிக்கா உள்ளிட்ட இடங்களில் எதிர்கொண்ட ‘மூர்ஸ்’ என அழைக்கப்பட்ட சமுதாயத்தின் மீது, அவர்கள் பின்பற்றிய சமயத்தின் மீதான பகைமையே பிரதான காரணமாகும்.

போர்த்துக்கல் எனும் நாடு சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக (கி.பி 711-1249) இஸ்லாத்தைப் பின்பற்றிய ‘மூர்ஸ்’ என்று அவர்களால் அழைக்கப்பட்ட ஒரு இனத்தின் ஆளுகைக்குட்பட்டு இருந்ததும், ‘இலங்கைச் சோனகர்’ போர்த்துக்கீசரால் ‘மூர்ஸ்’ என அழைக்கப்பட்டு வந்தமையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய அம்சங்களாகும். 


இது தவிர, முஸ்லிம்கள் தமது வரலாற்றை பாதுகாப்பதில் அதிக சிரத்தை எடுக்காததற்கு காரணம், தாங்கள் வணங்குகின்ற ஏக இறைவன் தங்களைக் காப்பான் என்று சர்வ வல்லமை பொருந்திய ஏக இறைவன் மீது கொண்ட அதீத நம்பிக்கையும் ஒரு காரணமாகும். இன்றும் கூட இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு அநியாயங்கள், அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட போதிலும் அவர்கள் அமைதியாக இருப்பதற்கு காரணமும் அவர்களது இறைநம்பிக்கையாகும்.

அதேவேளை, இஸ்லாம் கி.பி 8-9 ம் நூற்றாண்டில் அரேபியரூடாக இலங்கைக்கு வந்திருக்கலாம் என்பதை நாம் மறுக்கவில்லை. அதன் பின்னர் இலங்கையின் பூர்வீக குடிகளான சோனக சமூகம் ’முஸ்லிம்’ எனும் அடையாளத்திற்குள் வந்திருக்கலாம்.

ஆனால், இஸ்லாம் இலங்கைக்கு வந்தபோது, அதை ஏற்றுக்கொள்வதற்கு இங்கு ஒரு சமூகம் இருந்தது. அது இந்த மண்ணின் பூர்வீக சமூகம், அது பூர்வீகக் குடிகளின் ஒரு அங்கம். அந்த சமூகத்திற்கு இலங்கையின் வரலாறு அறியப்பட்ட காலம் முதல் இந்த மண்ணில் வரலாறு இருக்கிறது என்பதை வரலாற்றை திரிவுபடுத்துபவர்கள், சரித்திரப் புரட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பிறப்புச் சான்றிதழில் சோனகர் என அடையாளப்படுத்தப்படும் முஸ்லிம் சமுதாயம் வரலாற்றில் எப்பொழுதும் அரசியல் ரீதியான பிரிவினையை ஏற்படுத்தவில்லை. மாறாக, ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமாதானமாகவும், சமத்துவமாகவும் வாழ விரும்பும் அவர்கள் இலங்கை அரசியலமைப்பின் பத்தாம் பிரிவு கூறுகின்ற, விரும்பியவர் விரும்பிய மதத்தை, கொள்கையைத் தெரிவு செய்து வாழும் உரிமையையும், 12ம் பிரிவு கூறுகின்ற சகலருக்கும் சமவுரிமையையும், 12 ம் பிரிவின் 2 ம் பந்தி கூறுகின்ற இன மத அடிப்படையிலான பாரபட்சத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற அடிப்படை உரிமைகளை கோருவதற்கு பூர்விகக் குடிகள் என்கின்ற அடிப்படையில் அவர்களுக்கு பூரண உரிமை உள்ளதல்லவா?




கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget