புனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-05-22) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி




 குத்பா - (2020/05/22) 

இடம்: மக்கா (மஸ்ஜிதுல் ஹராம்) 

குத்பா நிகழ்த்தியவர்: கலாநிதி அஷ்ஷைக் அப்துர் ரஹ்மான் அஸ்ஸுதைஸ் (இரு புனிதஸ்தலங்களுக்குமான தலைவர்) 



 குத்பாவிலிருந்து... 

அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். அதனால் அவனது நெருக்கத்தை அதிகரித்துக்கொள்ளலாம். 

இறைவன் கூறுகிறான்: “எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்கிறாரோ, அவரை அவருடைய பாவங்களை விட்டும் நீக்கி, அவருக்கு (நற்) கூலியையும் மகத்தானதாக்குகின்றான்”. (அல்குர்ஆன்: 65:05) 

ரமழான் கண்ணியமான மாதமாகும். அது எம்மிடம் விருந்தாளியாக வந்துள்ளது. அதற்கும், அதன் காலநேரங்களுக்கும் எந்த மாதமும் ஈடாகாது. அதனை வரவேற்றதனால் நம்பிக்கையாளர்களின் உள்ளங்கள் சந்தோசமடைந்தன. அது அவர்களை விட்டும் பிரிந்து விடப்போகிறது என்று எண்ணி கவலையடைகின்றன. இறையச்சமான மாதமாகிய ரமழான் மாதத்தை இன்னும் சொற்ப நேரங்களில், அதன் கூலிகளை எதிர்பார்த்து வழியனுப்ப இருக்கிறோம். நல்ல மனிதர்கள் அதில் வெற்றி பெறுவார்கள். மனோ இச்சையை பின்பற்றியவர்கள் நஷ்டமடைவார்கள். 

இமாம் ஹஸனுல் பஸரி (ரஹ்) கூறுகிறார்கள்: ‘அல்லாஹ் றமழான் மாதத்தை படைப்பினங்களுக்கு ஓடுபாதை போன்று ஆக்கியிருக்கிறான். ஒரு சமூகம் அல்லாஹ்வை வழிப்பட்டு, அவனுடைய திருப்பொருத்தத்தை அடைந்து கொள்வதற்காக அதிலே முந்திக்கொள்வார்கள். மற்றொரு சமூகம் அதிலே தவறிழைத்து தாமதித்துவிடுவார்கள். ஆச்சரியம் என்னவெனில் மற்றவர்கள் வெற்றி பெரும் போது இவர்கள் நஷ்டமடைந்து விடுகிறார்கள்’. 

நம்பிக்கையாளர்களே!, முடிவுகளை பார்த்துதான் அமல்களின் கூலிகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே ரமழானின் எஞ்சியிருக்கின்ற காலங்களில் நல்லமல்கள் செய்து கொள்ளுங்கள். பாவங்கள் மன்னிக்கப்படாமல், நரகத்தில் இருந்து விடுதலை பெறாமல் ரமழானில் இருந்து வெளியேறிவிட வேண்டாம். இதுதான் ரமழானை சிறந்த முறையில் கழித்திருக்கிறோம் அல்லது மார்க்கத்தை சார்ந்து இருக்கிறோம் என்பதற்கான, புதிய மாற்றத்திற்கான அடையாளங்களாகும். 

இந்த வருட றமழான் மாதம் வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு தனித்துவமான முறையில் கடும் சோதனைக்கு மத்தியில் நம்மிடம் வந்தது. இறைவன் கூறுகிறான்: “நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்”. (அல்குர்ஆன்: 41:53) 

கொரோனா என்ற நோய்த்தொற்று ஒரு நாட்டையும் விட்டுவைக்காமல் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. இப்படி நெருக்கடியான சூழ்நிலையில் ஒரு நம்பிக்கையாளனின் உள்ளம் உறுதியானதாக இருக்க வேண்டும். அல்லாஹ்வின் கலா கத்ரை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைக்க வேண்டும், இப்படியான சோதனைகள், கஷ்டங்கள் நீங்க அனைத்தையும் அவனிடம் பொறுப்புச்சாட்ட வேண்டும். 

இறைவன் கூறுகிறான்: “பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்”. (அல்குர்ஆன்: 57:22) 

அறிஞர்கள் கூறுகிறார்கள்: ‘ஒரு நம்பிக்கையாளனை சோதனை சூழ்ந்து, அவன் இது அல்லாஹ்விடம் இருந்து வந்துள்ளது என்று அறிந்து, அதனை ஏற்றுக்கொள்கிறானோ, அவன்தான் உண்மையான நம்பிக்கையாளனாவான். உண்மையான அடியான் அல்லாஹ்வின் கலா கத்ரை ஏற்றுக்கொள்வான். சோதனைக்குப் பின்னால் பல யதார்த்தங்கள் உள்ளது என்பதை புரிந்து கொள்வான். அவையாவன: சோதனைகள் மூலம் பாவங்கள், தவறுகள் மன்னிக்கப்படுகின்றன. அந்தஸ்துகள் உயர்த்தப்படுகின்றன. அவன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக்கொள்கிறான். நபியவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றாரோ அவனை சோதிக்கிறான்”. (புஹாரி)’. 

நெருக்கடிகள், அனர்த்தங்கள் போன்வற்றில் அவற்றை முன்னெடுத்துச் செல்வதில் இந்த நாட்டு அரசாங்கம் முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இந்த நாட்டின் அனைத்து அமைப்புகளும் கவனமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதனை நாம் நம் கண் முன்னே கண்டு கொண்டிருக்கிறோம். இந்த கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதில் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். எனவேதான் இந்த நாட்டு மன்னர், முடிக்குரிய இளவரசர். சுகாதாரத்துறை அதிகாரிகள், வைத்தியர்கள், தாதியர்கள் போன்றவர்களுக்கு அல்லாஹ் நற்கூலியை கொடுப்பானாக. இப்படியான நன்மையான காரியங்களில் அவர்களின் கால்பாதங்களை உறுதிப்படுத்துவானாக. 

மக்களின் உயிர்களை, இரு புனிதஸ்தளங்களை, நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதில், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பாதுகாப்புப்படையினர் கவனம் செலுத்துகின்றனர். அவர்களுக்கும் அல்லாஹ்வின் நற்கூலிகள் உரித்தாக வேண்டும், அவர்களுக்கான அனைவரின் பிரார்தனைகளும் வீண்போகாது. 

தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த சோதனையும் அல்லாஹ்வின் உதவியோடு நீங்கி விடும். அல்லாஹ் கூறுகிறான்: “இன்னும், இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல”. (அல்குர்ஆன்: 14:20). 

என்னதான் சோதனையாக இருந்தாலும் பெருநாள் தினத்தில் சந்தோசமாக இருங்கள். அதனை கொண்டாடுங்கள். பகைமையை மறந்து விடுங்கள். தங்களுக்கு மத்தியில் உறவாடிக்கொள்ளுங்கள். அடுத்தவர்கள் மீது அன்பு காட்டுங்கள். அவர்களை மன்னியுங்கள். 

அனைவரையும் அல்லாஹ் நாட்டுக்கும், ஏனைய மக்களுக்கும் பயன்படத்தக்க வகையில் நேரான பாதையில் செலுத்துவானாக. இந்த கெடுதி, தீங்கு, சோதனையில் இந்த நாட்டையும் எல்லாம் முஸ்லிம்களையும் முழு உலகத்தையும் காப்பாற்றுவானாக. அல்லாஹ் கொடையாளன், சங்கையானவன். 



இரண்டாம் குத்பா 

அல்லாஹ்வை மிகவும் பயந்து கொள்ளுங்கள், பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவதில், பாவமீட்சி பெறுவதில் ரமழான் மாதத்தின் கடைசி எஞ்சிய நாட்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நலவுகளை அதிகமாக அடைந்துகொள்வதற்காக முந்திக்கொள்ளுங்கள். நிச்சயமாக முடிவுகளை பார்த்துதான் அமல்களின் கூலிகள் தீர்மானிக்கப்படுகின்றது. 

அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)”. (அல்குர்ஆன்:02:185). 

அல்லாஹ் ரமழான் மாத இறுதியில் அவனுக்கு நன்றி செலுத்துமுகமாக தக்பீர் கூறுவதை சுன்னத்தாக ஆக்கியிருக்கிறான். முஸ்லீம்களை தூய்மைப்படுத்துவதற்காக ஸகாத்துல் பித்ர் என்ற வணக்கத்தை கடமையாக்கியிருக்கிறான். அதன் அளவு ஒரு ஸாவு ஆகும். அது சுமார் மூன்று கிலோ எடை உடையதாகும். தங்களது ஊரில் பெரும்பானமையாக கருதப்படும் உணவுப்பொருட்களில் இருந்து இதனை கொடுத்து விட வேண்டும். 

‘நபியவர்கள் ஸகாதுல் பித்ராவாக ஒரு சாவு ஈத்தம் பழம் அல்லது ஒரு சாவு பார்லியை முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண் என சகலருக்கும் கடமையாக்கினார்கள்’. (புஹாரி, முஸ்லிம்) ஈத்தம் பழம் போன்ற உணவுகளை ஸகாத்துல் பித்ராவாக கொடுப்பதில் தவறில்லை. 

அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். இந்த சோதனை மிகுந்த ரமழான் மூலம் நிறைய பாடங்களை காற்றுக்கொள்ளுங்கள். இது இரு உலகுக்கும் சேமிப்பாக அமையும். 

அதேபோன்று ரஸூல்மார்களின் தலைவர், எல்லோருக்கும் உதாரண புருஷர், உம்மி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லுங்கள். அல்லாஹ் கூறுகிறான்: இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். “முஃமின்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்”. (அல்குர்ஆன்: 33:56). 

நபியவர்கள் கூறினார்கள்: ‘யார் என் மீது ஒரு தடவை ஸலவாத் சொல்கிறாரோ அல்லாஹ் அதன் மூலம் அவருக்கு பத்து தடவை ஸலவாத் சொல்கிறான்’. 

அடுத்து நேர்வழி பெற்ற நான்கு கலீபாக்கள், மற்றைய மீதமான சுவர்கத்துக்கு நன்மாராயம் கூறப்பட்ட ஆறு ஸஹாபாக்கள், பத்ர் யுத்தத்தில் கலந்து கொண்டவர்கள், அகபா உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்கள், மற்றும் ஏனைய ஸஹாபாக்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. 

இறுதியாக மிக நீண்ட துஆவோடு குத்பாவை நிறைவு செய்தார். 



முற்றும்... 



கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget