கக்கப்பட்ட இனவாதமும் கரைத்த இயற்கையழிவும்...

(முஹம்மது வஸீம் ஹுஸைன்)

கடந்த கால இலங்கை நாட்டில் மலர்ந்த நல்லாட்சியில் மக்கள், விரும்பம் கொண்டு ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் சிறுபாண்மை இனங்களுக்கிடையான மத ரீதியான நடவடிக்களை இலங்கை வாழ் சிறுபாண்மை இனங்கள் மறுதலைத்த வேளையில் மஹிந்தவின் சுதந்திர கட்சியின் செயலாளராக கடமையாற்றிய மைத்திரியின் வெளிநடப்பு அப்போதே நல்லாட்சி ஒன்றை உருவாக்கும் என்ற நம்மை பலர் மனங்களில் உதித்தது எனலாம்.

நல்லாட்சி அரசு என்ற நாமத்தோடு ஏற்படுத்தப்பட்ட கூட்டான ஆளும் அரசாங்கத்தில் சிறுபாண்மை எனப்படுகின்ற தமிழ்,முஸ்லிம் மக்கள் பெரும் சந்தோசமடைந்தனர். யுத்தத்தின் பின்னரான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரீசிலனைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்ற அவா தமிழ் சமூகத்திடம் மேலோங்கியது. முஸ்லிம் சமூகமானது மஹிந்த ஆட்சியில் தமது சமூகத்திற்கு ஏற்படுத்தப்பட்ட அச்ச நிலை, உயிர் அச்சுறுத்தல், மொழிச் சுத்திகரிப்பு, முஸ்லிம்கள் மீதான காவிகளின் செயல்கள் போன்றன தீர்வுக்கு வர வேண்டும் என்பதே இலக்காக இருந்தது.

கரையோர கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரையில் மொழி ரீதியாக அடக்கப்படும் அம்பாரை மாவட்ட பெரும்பாண்மை முஸ்லிம்களுக்கு அதிகார ரீதியான கரையோர அலகு வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன் மொழியப்பட, அப்போதைய தேர்தல் காலத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதற்கான வாக்குறுதியை கல்முனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் வழங்கியிருந்தார்.

இப்படி பல எதிர்பார்ப்புகளோடு ஆட்சிபீடம் தரித்த வேளையில், மழை நீருக்குப் பயந்து பீலிக்கு கீழ் போய் நின்ற கதையாக முஸ்லிம் மக்களின் நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. சாதாரணமாக இருந்த வில்பத்து குடியேற்றம் வன பரிபாலன சபைக்குரிய காணியாக வார்த்தமானியில் அறிவுறுத்தல், பொத்துவில் எல்லைக்குட்பட்ட முஸ்லிம்களது காணிகளை வன .இலாக்காவானது பெரும் பற்றைகள் என வனப் பிரதேசமாக அறிவித்தமை, இறக்காமத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் புதிதாக புத்தர் சிலை, என பழைய பல்லவிகள் துளிர்விட ஆரம்பித்துள்ளது.

நாட்டு மக்கள் குறிப்பாக பேரினவாத மக்களில் சிலர் குறிப்பாக பொதுபல சேன, சிங்கள ராவய போன்ற அமைப்புக்கள புதிதாக பூஸ்ட் குடித்தாற் போல் மீண்டும் புத்துயிர் பெற்று முஸ்லிம்கள் கள்ளத் தோணியில் வந்தார்கள் என வசைபாடும் ஆட்டம் மீண்டும் தலை தூக்கியுள்ளது.

ஆசையோடு சேகரித்த மலர் மாலையை மீண்டும் குரங்கின் கையில் கொடுத்து விட்டோமோ? என்ற அச்சத்தில் முஸ்லிம் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் இந்நாட்டு முஸ்லிம்களையும் அவர்கள் வணங்கும் ஏக வல்லோன் அல்லாஹ்வையும் வசைபாடியதோடு மட்டுமல்லாது, புனித குர்ஆனையும் இழிவுபடுத்திப் பேசியிருந்தார்.

அப்போது நல்லாட்சி என்று சொல்லும் இவ்வரசாங்கம் காதிருந்தும் செவிடாகவே இருந்தது. ஆனால் இதை எதிர்த்து பேசிய அப்துர் ராஸிக் அவர்களை நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுக்க வேண்டும் என்பதற்காக வேண்டி கைது செய்து சிறையில் அடைத்தது. அப்போதே மக்கள் மத்தியில் நல்லாட்சியின் வேஷம் களையத் துவங்கியது.

இவ்வாறு ஒரு பக்கம் நாடு சென்றாலும் நாட்டில் அபிவிருத்தியில் பல மாற்றம் வெளிப்பட்டன. கடந்த அரசாங்கத்தில் குற்றம் இழைத்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் கடுமையாக விசாரிக்கப்பட்டனர். யுத்தத்தில் நடைபெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் என தடைப்பட்டிருந்த GSP+ வரிச்சலுகையை மீண்டும் நாட்டிற்குள் கொண்டு வர அரசாங்கம் அயராத முயற்சிகளில் ஈடுபட்டது.

வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றும் பணிகள், அவர்களுக்கான குடிநீர் வசதிகள் போன்றவைகளை அரசாங்கம் துரிதப்படுத்தியது. இவ்வாறு நாடு போகும் பாதையில் மீண்டும் ஞானசார தேரர் சிறுபாண்மை மக்களின் குரல்வளைகளை நசுக்குகின்ற நாசகார வேளையில் கோலூன்ற ஆரம்பித்துள்ளார்.

நாட்டிலுள்ள முஸ்லிம்கள் மீதான எதிர்ப்பு அலைகளை ஆரம்பித்தார். அதனால் பள்ளிவாயல்கள் பாதுகாக்கப்பட வேண்டிய அச்சமான சூழலுக்கு தள்ளப்பட்டது. முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியில் மக்கள் அச்சம் நிறைந்த சூழலில் வாழ ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் அதிகாரம் அவரை அடக்க முற்பட்ட போது அங்கு சிறிய கலவரம் வெடிக்கின்றன. இவ் அம்சம் நாட்டிற்கு பெரும் தலையிடியாக ஊற்றெடுத்துள்ளது.

கடந்த வாரங்களுக்கு முன்னர் அரச மொழிகள் திணைக்களம், அரச மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிப்பயிலகம், அரசு சாரா நிறுவன செயலகம் போன்ற திணைக்களத்தை தன்னகத்தே கொண்டுள்ள தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சரும் மலையக மக்களது அரசியற் தலைவருமான மனோ கணேசன் அவர்களது அமைச்சில் ஞானசார தேரரது அடாவடித்தனாமான போக்கு நாட்டில் வாழும் நல்ல சிந்தனை கொண்ட பல பெரும்பாண்மை மக்களிடத்திலும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி நாட்டில் முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் உடைப்பு, வர்த்தக நிலையங்கள் எரிப்பு, சொத்துக்கள் சூரையாடப்படல் போன்ற பல அசம்பாவிதங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன. பொறுமையை மீறிய ஜனாதிபதி சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க பாரபட்சமின்றி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன் பின்னரான காலப்பகுதியில் தான் நாட்டின் தென்,மேல் மாகாணங்களில் வரலாறு காணாத மழை வீழ்ச்சியோடு நாட்டின் காலநிலை மறுகணம் தூக்கிவாரிப் போட்டது.

நாட்டில் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 208 வரை அதிகரித்துள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

அதேவேளை 92 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம் கூறியுள்ளது. மேலும் 72 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 75,516 குடும்பங்களின் 06 இலட்சத்து 77,241 பேர் வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் உயர்வான பகுதிகளில் முகாமிட்டடுள்ளனர். இம்மக்களுக்காக சீனா இரண்டு கப்பல்களை அத்தியவசியப் பொருட்களுடன் அனுப்பியிருக்கிறது. அமைச்சர் பாலித அழகபெரும அவர்கள் கிங் மேக்கராக களத்தில் குதித்து சேவையாற்றிக் கொண்டிருக்கிறார். அமைச்சர் ஹக்கீம் மக்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர்த் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். ஏனைய அமைச்சர்களும் பாதிக்கப்பட்ட மக்களது தேவைகளை பூரத்தி செய்ய அங்கு படையெடுக்கின்றனர்.

பெரும்பாண்மையினத்து மக்களது சொத்துக்கள் பெருவாரியாக இப் பெருமழையில் அழிவடைந்துள்ளன. முஸ்லிம்களது உடமைகளும் தண்ணில் எழுதப்பட்ட எழுத்துக்களாக மாறியுள்ளது. இந் நிலையில் நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்கள் தங்களால் முடியுமான மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன,மத பேதம் மறந்து அனைவரும் இந் நாட்டு மக்கள் என அனைத்து மதத்தினருக்குமான உலர் உணவுப் பொருட்கள், அத்தியவசியப் பொருட்கள் என்பன ஏனைய முஸ்லிம் மக்களால் சேகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக பயனளிக்கும் வகையில் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன..

இந் நிலையில் இப்படி அனைவரும் ஒரு தாய் நாட்டு மக்கள் என்ற வகையில் ஒற்றுமையாக இருக்கின்ற போது நாடு இன்னும் முன்னேற்ற பாதையில் பயணிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அன்பானவர்களே! நாங்கள் ஒன்றும் கள்ளத் தோணியில் வந்த காவாலிகள் கிடையாது. இந்நாட்டு சுதந்திர போராட்டத்திற்காக உயிர் நீத்த தியாக செம்மல்கள். ஆங்கிலேயரிடமிருந்து சிங்கள மன்னர்களை காப்பாற்ற தன் உயிரை தானம் செய்தவர்கள். பொருளாதார ரீதியாக இலங்கையின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்கள். இப்படியான நாங்கள் ஒருகாலமும் இலங்கையின் இறைமையில் கைவைக்கவே மாட்டோம். ஆயுதம் ஏந்த எந்த நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ளப் போவதுமில்லை. இடர்கால சூழ்நிலையில் கனைத்த இனவாதத் தீ இன்று கனமழையால் கறைந்து போயுள்ளது. இப்போது ஏற்பட்ட அன்னியோன்னியம் நீடித்து நிலைக்குமானால் பார்போற்றும் நாடாக இலங்கையும் மிளிரும் அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக! 



கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget