ரமளான் வழிகாட்டி" பகுதி - 02

9. நோன்பை விட அனுமதிக்கப்பட்டவர்கள்

أَيَّامًا مَعْدُودَاتٍ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنتُمْ تَعْلَمُونَ. شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنْ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمْ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمْ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمْ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்கவேண்டும். எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக ஃபித்ராவாக ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். இன்னும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது. ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). ரமளான் மாதம் எத்தகைய தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (மழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களில் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). அல்குர்ஆன் 2:184,185)

(1) ஹம்ஸா இப்னு அம்ருல் அஸ்லமி என்னும் நபித்தோழர் நான் பிரயாணத்தில் நோன்பு நோற்கலாமா? என நபி (ஸல்) அவர்களிடத்தில் கேட்டார்கள். (அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார்) நீங்கள் விரும்பினால் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் விரும்பினால் நோன்பை விட்டுவிடுங்கள்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

(2) நாங்கள் நபி(ஸல்)அவர்களுடன் ஒரு யுத்தத்துக்குச் சென்றிருந்தோம். எங்களில் நோன்பு நோற்றவர்களும் நோன்பை விட்டவர்களும் இருந்தனர். நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை கூறவில்லை. யாருக்கு சக்தி இருக்கின்றதோ அவர் நோன்பு நோற்பது அவருக்குச் சிறந்ததென்றும், யாருக்கு அதற்கு சக்தி இல்லையோ அவர் நோன்பை விடுவது சிறந்ததென்றும் அவர்கள் கருதினார்கள் என அபூ சயீதுல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

(3) நபி(ஸல்) அவர்கள் ஒரு பிரயாணத்தின் போது நிழலிலே ஒருவரைச் சூழ்ந்து மக்கள் கூடியிருப்பதைக் கண்டு இந்த உங்களின் நண்பருக்கு என்ன ஏற்பட்டு விட்டது? என கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர் நோன்பாளி என கூறினார்கள். பிரயாணத்தில் நோன்பு நோற்பது நல்ல செயலில்லை. அல்லாஹ் உங்களுக்கு அளித்த அனுமதியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
இன்னும் ஒரு அறிவிப்பில் ஒரு மரத்தின் நிழலிலே ஒருவர் மீது தண்ணீர் தெளிக்கப்படுவதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். ஆதாரம்: நஸயீ
(4) நபி(ஸல்) அவர்களுடன் கோடைகாலத்தில் நாங்கள் ஒரு பிரயாணம் செய்தோம். எங்களில் நோன்பு நோற்றவர்களும் நோன்பு நோற்காதவர்களும் இருந்தார்கள். நாங்கள் (வெப்பத்தின் காரணமாக அப்பிரயாணத்திலே) நிழலில் உட்கார்ந்தோம். நோன்பு நோற்றவர்கள்(களைத்து) விழுந்துவிட்டார்கள். நோன்பில்லாதவர்கள் எழுந்து பிரயாணிகளுக்குத் தண்ணீர் புகட்டினார்கள். இதைப் பார்த்த நபியவர்கள் ''நோன்பில்லாதவர்கள் இன்று அதிக நன்மை பெற்றுவிட்டார்கள்"எனக் கூறினார்கள். ஆதாரம்: நஸயீ
(5) நிச்சயமாக அல்லாஹ் பிரயாணிக்கு தொழுகையில் பாதியையும் (அதாவது நாலு ரக்அத் தொழுகையை இரண்டு ரக்அத்தாக சுருக்குவதற்கும்) நோன்பை விடுவதற்கும் பாலூட்டும் தாய்க்கும் நோன்பை விடுவதற்கு அனுமதித்து விட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்;: நஸயீ
(6) மக்கா வெற்றி பெற்ற வருடம் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றவர்களாக நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். கதீத் என்னும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டுவிட்டார்கள். ஆதாரம்: முஸ்லிம்

(7) கோடைகாலத்தின் போது நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் சென்றிருந்தோம். ஒரு மனிதர் தன் தலைக்கு மேல் கையை வைக்கும் அளவுக்கு அந்த சூடு இருந்தது. எங்களில் நபியவர்களையும், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர வேறு யாரும் நோன்பு நோற்கவில்லை என அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி

விளக்கம்: ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது முஸ்லிமான புத்தியுள்ள, வயதுவந்த ஆண், பெண் ஒவ்வொருவருக்கும் கடமையாகும். ஆனால், பிரயாணி, நோயாளி, கர்ப்பிணிப்பெண், பாலூட்டும் தாய், நோன்பு நோற்க இயலாத வயோதிகர்கள், நோயிலிருந்து குணமாவதற்கு வாய்ப்பில்லாத நோயாளிகள் இவர்களுக்கு நோன்பை விடுவதற்கு அனுமதி உண்டு. ஆனால் பிரயாணி தன் பிரயாணத்தை முடித்துக் கொண்டதும் நோயாளியின் நோய் குணமானதும் விட்ட நோன்புகளை நோற்க வேண்டும். கர்ப்பிணிப்பெண் மற்றும் பாலூட்டும் தாய் இவ்விருவரும் நோன்பு நோற்பதினால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதும் ஆபத்து ஏற்படுமென்று பயந்தால் நோன்பை விட்டுவிடலாம், இவர்களும் குழந்தையை பெற்றெடுத்ததற்குப் பிறகு அல்லது பாலூட்டியதற்குப் பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். நோன்பு நோற்கவே முடியாத வயோதிகர்கள் மற்றும் நோய் குணமாவதற்கு வாய்ப்பில்லாத நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு வீதம் உணவளித்தால் போதும்; விடுபட்ட நோன்புகளை நிறைவேற்ற வேண்டியதில்லை. அல்லாஹ் நன்கறிந்தவன்.

10. நோன்பு நேரத்தில் தவறிலிருந்து விலகி இருத்தல்
1) யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

2) எத்தனையோ நோன்பாளிகள் அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை, இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர் இரவில் கண்விழித்திருப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றிருப்பதில்லைஎன நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: நஸயீ, இப்னுமாஜா
3) உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடல் உறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் "நோன்பாளி" என்று கூறிக்கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

விளக்கம்: நோன்பு நோற்பதென்பது வெறும் பசி, தாகத்தோடு இருப்பது மட்டுமல்ல, பசி தாகத்தை கட்டுப்படுத்துவதைப் போல மற்ற எல்லாத் தவறுகளையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். யார் நோன்புநோற்றுக் கொண்டு தவறான பேச்சுக்கள் இன்னும் தவறான செயல்களைச் செய்கின்றாரோ அவர் பசித்திருந்ததையும் தாகித்திருந்ததையும் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளமாட்டார். ஆகவே நோன்பு மாதத்தில் எல்லாத் தவறுகளையும் விட்டுவிடுங்கள். ஆனால் இன்று நோன்பு காலத்தில்தான் நோன்பு நோற்றவர்கள் இரவெல்லாம் வீணாக விழித்திருந்து சுப்ஹு தொழுகையின்றி தூங்கிவிடுகிறார்கள். இன்னும் சிலரோ பகலையெல்லாம் தூக்கத்திலேயே கழித்து, தொழுகைகளை விட்டு விடுகின்றார்கள். அல்லாஹ் நம்மீது நோன்பைக் கடமை யாக்கியது நாம் பாவங்களைச் செய்வதற்கும் ஃபர்லான தொழுகைகளை விடுவதற்குமா? நிச்சயமாக இல்லை! நாம் எல்லாப் பாவங்களையும் விட்டு தொழுகைகள் மற்றும் நல்அமல்களைச் செய்வதற்குத்தான் அல்லாஹ் அம்மாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றான். ஆகவே தவறுகளை முற்றாக விட்டு தொழுகைகளை உரிய நேரத்தில் தொழுது எல்லா நல்அமல்களையும் செய்யுங்கள், அல்லாஹ் நம் அனைவருக்கும் எல்லா தவறுகளையும் முற்றாக விடுவதற்கு வாய்ப்பளிப்பானாக!


11. நோன்பாளி மறதியாக சாப்பிட்டால் குடித்தால்

1) (யாராவது) மறந்துபோய் சாப்பிட்டால் அல்லது குடித்தால் அவர் அவருடைய நோன்பை பரிபூரணப்படுத்தட்டும், நிச்சயமாக அல்லாஹ்தான் அவரை சாப்பிடவும், குடிக்கவும் வைத்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

விளக்கம்: யாராவது நோன்பு நேரத்தில் மறதியாக சாப்பிட்டால் அல்லது குடித்தால் குற்றமில்லை. ஞாபகம் வந்ததும் சாப்பிடுவதை குடிப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும். அவருடைய நோன்பு பரிபூரணமானதே. யார் வேண்டுமென்றே சாப்பிடுகின்றாரோ அல்லது குடிக்கின்றாரோ அவரின் நோன்பு முறிந்துவிடும், இன்னும் அது பெரும் குற்றமாகும். அந்த நோன்பைப் பிறகு நோற்க வேண்டும்.
12. நோன்பாளி குளிப்பதில் தவறில்லை
1) நபி (ஸல்) அவர்கள் (உடலுறவின் காரணமாக) முழுக்கான நிலையில் பஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

2) நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டிருக்கும் போது வெப்பம் அல்லது தாகத்தின் காரணமாக தன் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள் என்பதாக சில நபித்தோழர்கள் மூலமாக அபூபக்ர் இப்னு அப்துர்ரஹ்மான்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத், முஅத்தா, அபூதாவூத்

3) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது ஈரத்துணியை தன்மீது போடுவார்கள். ஆதாரம்: புகாரி

விளக்கம்: தேவைப்படும் போது நோன்பாளி குளித்துக் கொள்வதில் தவறில்லை. புகாரி(ரஹ்) அவர்கள் தன் புகாரி கிரந்தத்திலே நோன்பாளி குளிக்கும் பாடம் என தலைப்பிட்டு மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களைக் கூறுகின்றார்கள்.

13. நோன்பாளி பல்துலக்குதலில் குற்றமில்லை

1) என் உம்மத்தின் மீது கஷ்டம் இல்லையென்றிருந்தால் ஒவ்வொரு முறை உளுச் செய்யும் போதும் பல் துலக்குவதற்கு நான் கட்டளையிட்டிருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ, நஸயீ
2) நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது கணக்கிட முடியாத அளவுக்கு பல் துலக்குவதை நான் பார்த்திருக்கிறேன் என ஆமிர் இப்னு ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
3) அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பகலின் ஆரம்பம் இன்னும் கடைசி நேரத்தில் பல் துலக்குவார்கள். ஆதாரம்: புகாரி
விளக்கம்: பல் துலக்குவது நபியவர்கள் மிகவும் வலியுறுத்துகின்ற நடைமுறையாகும். இதனை நோன்பிலும் நோன்பு அல்லாத காலங்களிலும் செய்துள்ளார்கள். சிலர் நோன்பு நோற்றவர் பல் துலக்குவது கூடாது, அல்லது லுஹர் நேரத்திற்குப்பின் செய்யக்கூடாது என்று கூறுவது ஆதாரமற்றதாகும்.
14. நோன்பாளியின் உளு

1) அல்லாஹ்வின் தூதரே! உளுவைப் பற்றி எனக்குக் கற்றுக்கொடுங்கள் என நபி (ஸல்) அவர்களிடத்தில் நான் கேட்டேன். உளுவைப் பரிபூரணமாகச் செய்து கொள்ளுங்கள் என கூறினார்கள். இன்னும் விரல்களுக்கு மத்தியில் கோதிக் கழுவுங்கள், நோன்பில்லாத நிலையில் மூக்குக்குத் தண்ணீர் செலுத்துவதை அதிகப்படுத்துங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என லகீத் இப்னு சபீரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ, அபூதாவூத்

விளக்கம்: நோன்பு நோற்றவர் உளுச் செய்தால் நாசிக்கும் வாய்க்கும் தண்ணீர் செலுத்தும்போது அடித்தொண்டை இன்னும் அடிமூக்கு வரைக்கும் தண்ணீரைச் செலுத்தாமல் நோன்பில்லாத நேரத்தில் செய்வதை விட குறைத்துச் செய்ய வேண்டும். அடிமூக்கு அடித்தொண்டை வரைக்கும் தண்ணீரைச் செலுத்தினால் வாய்க்குள் தண்ணீர் செல்வதற்கு வாய்ப்பிருக்கின்றது.

15. நோன்பின் நிய்யத்தை பஜ்ருக்கு முன் வைப்பது அவசியம்
1) அமல்களுக்குக் கூலி கொடுக்கப்படுவது எண்ணங்களைப் பொறுத்துத்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
2) பஜ்ருக்கு முன்னால் யார் நிய்யத்து வைக்கவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ

விளக்கம்: நிய்யத் என்பது உள்ளத்தில் நினைப்பதற்குச் சொல்லப்படும். இன்றைய நோன்பை நோற்க வேண்டும் என்று நினைத்து ஸஹர் உணவு உண்பதே நிய்யத்தாகும். ஆனால் இன்று நிய்யத் என்ற பெயரில் சில வார்த்தைகள் (இந்த வருடத்து ரமளான் மாதத்தின் பர்ளான நோன்பை நாளைப்பிடிக்க அல்லாஹ்வுக்காக நிய்யத் வைக்கின்றேன் என்று) சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. இப்படி நபியவர்கள் செய்யவுமில்லை. சொல்லித்தரவுமில்லை. இதற்கு நிய்யத் என்று சொல்லப்படவும் மாட்டாது. மேலும், இன்றைய நோன்பை ஒருவர் நோற்க வேண்டும் என்று நிய்யத் இல்லாமல் (எண்ணமில்லாமல்) பஜ்ர் வரைக்கும் தூங்கிவிட்டால், அவருக்கு அன்றைய நோன்பை நோற்க முடியாது. காரணம் அவர் இரவில் நிய்யத் (எண்ணம்) வைக்கவில்லை. ஆனால் இன்றைக்கு நோன்பு நோற்க வேண்டும் என்று எண்ணி பஜ்ர் வரைக்கும் ஒருவர் தூங்கிவிட்டால், ஸஹர் உணவை உண்ணாவிட்டாலும் அவர் அன்றைய நோன்பை நோற்கலாம்.
16. பெருந்தொடக்குள்ள பெண்கள்
1) நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் வாழும்போது (மாதவிடாய் காரணமாக) சுத்தம் இல்லாமல் இருந்தால் (தொழவும் மாட்டோம், நோன்பு நோற்கவும் மாட்டோம்) சுத்தமானதும் நாங்கள் (விட்ட) நோன்புகளை நோற்கும்படி நபியவர்கள் எங்களுக்கு ஏவுவார்கள். ஆனால் விடுபட்ட தொழுகைகளைத் தொழும்படி ஏவமாட்டார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ

விளக்கம்: பெண்கள் மாதவிடாய் மற்றும் பிள்ளைப் பேறினால் சுத்தம் இல்லாத காலங்களில் நோன்பு நோற்கக் கூடாது, சுத்தமானதும் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். அதற்காக எந்தப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை.

17. விரைவாக நோன்பு திறப்பது சுன்னத்தாகும்
1) நோன்பு திறப்பதை, (தாமதிக்காது) அவசரப்படுத்தும் காலம் வரைக்கும் என் உம்மத்தினர் நலவிலேயே இருப்பார்கள்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
2) நானும், மஸ்ரூக் என்பாரும் ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் சென்று மூஃமின்களின் தாயே! நபி (ஸல்) அவர்களின் இரு தோழர்கள் நன்மை தேடும் விஷயத்தில் குறைவு செய்வதில்லை, ஒருவர் நோன்பு திறப்பதை அவசரப்படுத்தி நேரத்தோடு தொழுதும் விடுகின்றார். மற்றவர் நோன்பு திறப்பதைப் பிற்படுத்தி தொழுகையையும் பிற்படுத்துகின்றார் என்றனர். யார் நோன்பு திறப்பதையும் தொழுகையையும் அவசரப்படுத்துகின்றார்? என ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) என்று நாங்கள் கூறினோம். அப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
இன்னும் ஒரு அறிவிப்பில், மற்ற நபித்தோழர் அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் என்று வந்திருக்கின்றது. ஆதாரம்: திர்மிதீ
விளக்கம்: மஃரிப் நேரம் வந்ததும் நோன்பு திறப்பதே சுன்னத்தாகும். இன்று சிலர் மஃரிப் நேரம் வந்த பின்பும் நோன்பு திறக்காமல் பேணுதல் என்று சொல்லிக் கொண்டு சூரியன் மறைந்த பின்பும் நோன்பு திறப்பதைப் பிற்படுத்துகின்றார்கள். ஆனால் நபியவர்களோ மஃரிப் நேரம் வந்ததும் நோன்பை திறக்கச் சொல்லியிருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு மாறாகச் செய்வது பேணுதலாகுமா? இது இஸ்லாத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பித்அத்தாகும் என இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (பத்ஹுல் பாரி 2:235)

18. பேரீத்தம் பழத்தால் நோன்பு திறப்பது சிறந்தது

1) நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வதற்கு முன் கனிந்த பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அது இல்லையென்றால் சாதாரண சில பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அதுவும் இல்லையென்றால் சில மிடர் தண்ணீர் குடித்துக்கொள்வார்கள். ஆதாரம்: திர்மிதீ
2) உங்களில் ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு திறக்கட்டும், அது கிடைக்கவில்லையென்றால் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ, அபூதாவுத்

19. நோன்பு திறந்த பின் ஓதும் துஆ

ذَهَبَ الظَّمَأُ وَ ابْتَلَّتِ الْعُرُوقُ، وَ ثَبَتَ الأجْرُ إنْ شَاءَ اللَّهُ

“தஹபள்ளமஊ வப்தல்லதில் உரூக்கு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்”
பொருள்: தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் உறுதியாகிவிட்டது. ஆதாரம்: அபூதாவூத்



20. நோன்பு திறக்கும்போது கேட்கப்படும் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்

1) நோன்பாளி நோன்பு திறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை தட்டப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: இப்னுமாஜா

2) நோன்பாளி நோன்பைத் திறக்கும் வரைக்கும், நீதியான அரசன், அநியாயம் செய்யப்பட்டவன் இம்மூவரின் பிரார்த்தனைகள் தட்டப்படுவதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ



விளக்கம்: நோன்பாளி நோன்பு நேரத்தில் கேட்கும் பிரார்த்தனைகளையும், இன்னும் நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனைகளையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். ஆகவே நோன்பு காலங்களில் அதிக பிரார்த்தனைகளைச் செய்யுங்கள்.

இன்று முஸ்லிம்களில் பலர் நோன்பு திறக்கும் நேரத்தில் வீண் பேச்சுக்களிலும், வீண் வேலைகளிலும் ஈடுபடுகின்றார்கள். இப்படி இந்த சிறப்பான நேரங்களை வீணாகக் கழிக்காமல் அல்லாஹ்விடம் நமது ஈருலக வெற்றிக்காகவும், எல்லா முஸ்லிம்களுக்காகவும் பிரார்த்தியுங்கள். நமது சகல தேவைகளையும் பூர்த்தியாக்கித் தருவதற்கு அவன் போதுமானவன்.

21. நோன்பு திறக்க வைப்பதின் சிறப்புகள்

1) யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ நோன்பு நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையிலும் எதுவும் குறையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ

விளக்கம்: நோன்பு திறக்க வைப்பது சிறந்த அமலாகும். நோன்பு திறக்க வைப்பதென்பது பெரிய அளவுக்கு உணவளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு பேரீத்தம் பழத்தைக் கொடுத்து நோன்பு திறக்க வைத்தாலும் இந்த நன்மை கிடைத்துவிடும். ஒவ்வொருவரும் அவரவரின் வசதிக்கு ஏற்றவாறு செய்து கொள்ளலாம்.

22.நோன்பின் கடமைகள்(பர்ளுகள்)

1) பருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும். பருவமடையாதவர்களின் மீது நோன்பு நோற்பது கடமையில்லை என்றாலும் பழக்கப்படுத்துவதற்காக நோன்பு நோற்குமாறு ஏவலாம்.
2) பைத்தியக்காரர்கள், நன்மை, தீமையை பிரித்தரிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர்கள் மீது நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்புக்குப் பகரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியதுமில்லை.
3) முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
4) சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியள்ளது. நோய் நீங்கி பின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
5) பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பிய பின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
6) கர்ப்பமாக இருக்கும் பெண், அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் பெண் நோன்பு நோற்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என்று பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. அந்தப் பயம் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
7) மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோற்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
8) நீரில் மூழ்குதல் மற்றும் தீ விபத்துப் போன்ற ஆபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பிறகு அந்த நோன்பை நோற்க வேண்டும்.

23. நோன்பை முறிக்கும் செயல்கள்
1) சாப்பிடுதல், குடித்தல், புகைபிடித்தல் போன்றவற்றால் நோன்பு முறிந்துவிடும்.
2) முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்துவிடும். தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.
3) உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களைவ (மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்புக்குள் செலுத்தினால் நோன்பு முறிந்துவிடும்.
4) மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்துவிடும்.

24. அனுமதிகள்
1) நோன்பின் போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல் பிடுங்குதல், கண் காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்றவற்றிற்கு அனுமதியுள்ளது.
2) நோன்பு நாட்களின் பகற்பொழுதில் பல்துலக்குவது தவறில்லை. அது நோன்பல்லாத நாட்களின் சுன்னத்தாக இருப்பது போன்றே நோன்பு நாட்களிலும் சுன்னத்தாகும்.
3) குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்வது தவறில்லை. சுப்ஹு தொழுகைக்காக, குளித்துக் கொண்டாலே போதுமானது.
4) கடும் வெயிலின் காரணமாக, குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக் கொள்வதிலோ, அல்லது பகல் மற்றும் மாலைப் பொழுதில் குளித்துக் கொள்வதிலோ தவறில்லை.
5) நோன்பு திறக்க எதுவும் கிடைக்காவிட்டால். நோன்பு திறக்கும் நேரத்தில், நோன்பு திறப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டும். பிறகு வாய்ப்பு கிடைக்கும்போது சாப்பிட்டுக் கொண்டால் போதுமானது.
6) வாய்க் கொப்பளிக்கும் போது தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கி விட்டால் நோன்பு முறியாது. ஆனால் அடித்தொண்டை வரை தண்ணீரை செலுத்தாமல் இருக்க வேண்டும்.
7) நேரம் தெரியாது சூரியன் மறைந்துவிட்டது என்று நினைத்து, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது பஜ்ரு நேரம் வரவில்லை என்று நினைத்து, பஜ்ர் நேரம் வந்ததற்குப் பின்னரோ சாப்பிட்டு விட்டால் நோன்பு முறியாது. எனினும் சரியான நேரம் தெரிந்து விட்டால் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
8) காயங்கள், சிறு மூக்கு உடைதல், பல் பிடுங்குதல் போன்றவற்றால் இரத்தம் வெளியானால் நோன்பு முறியாது.
9) மறந்து அல்லது தெரியாமல் சாப்பிட்டால், அல்லது குடித்தோவிட்டால் நோன்பு முறியாது, ஆனால் நோன்பின் நினைவு வந்தவுடனேயே நிறுத்திக் கொள்ளவேண்டும்.

25. ஒழுக்கங்கள்
1) பஜ்ருக்கு சற்று முன்பு ஸஹர் உணவு உண்பதும், சூரியன் மறைந்தவுடனேயே தாமதப்படுத்தாது நோன்பு திறப்பதும் சுன்னத்தாகும்.
2) பேரீத்தம்பழத்தைக் கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.
3) ஸஹர் நேரத்தில் தாமதமாக எழுந்து பஜ்ருடைய நேரம் வந்துவிட்டது எனத் தெரிந்தும் கூட விடி ஸஹர் என்ற பெயரில் எதையேனும் உண்பதும் தவறாகும். பஜ்ர் நேரம் வந்து விட்டால் எதையும் உண்ணக்கூடாது. இதுபோன்ற நிலைகளில் ஸஹர் செய்யாமலேயே நோன்பு நோற்க வேண்டும்.
4) ஹலாலான உணவையே உட்கொள்ள வேண்டும். இதை எல்லாக் காலங்களிலும் கடைபிடிக்கவேண்டும்.
5) நோன்பாளி அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும், அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாக தவிர்ந்து கொள்ளவேண்டும். பொய், புறம், கோள் சொல்லுதல், ஏமாற்றுதல், ஹராமான வழியில் பொருள் ஈட்டல் போன்ற தவறான அனைத்து சொல், செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல் கட்டாயக் கடமையாகும்.
6) கடைசிப் பத்து நாட்களில் அதிலும் குறிப்பாக ஒற்றைப்படை இரவுகள் அனைத்திலும் இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவை தேடிக் கொள்ளவேண்டும்.
7) பெருநாள் தொழுகைக்கு முன்பு (ஸதகத்துல் ஃபித்ர்) எனும் பெருநாள் தர்மத்தை முறையாக கொடுக்க வேண்டும்.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget