ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 02

 
அகீதாவின் முக்கியத்துவம்

இஸ்லாமிய கொள்கை கோட்பாட்டிற்கு (அகீதாவிற்கு) பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன. அவற்றுள் சில:

1. அனைத்து நபிமார்களும், ரஸூல்மார்களும் அல்லாஹ்வை இறைவனாக ஏற்று, அவனை மாத்திரமே வணங்க வேண்டுமென்ற இஸ்லாமிய கொள்கையின் பக்கமே மக்களை அழைத்துள்ளனர். அல்லாஹ் கூறுகிறான், 'என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை எனவே என்னையே வணங்குங்கள்! என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை'. (அல்குர்ஆன் - 21 : 25)

2. இறைமைக் கோட்பாடு அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரியது என ஒருமைப்படுத்துவதும், வணக்க வழிபாடுகளை அவனுக்கு மாத்திரம் நிறைவேற்றுவதுமே மனிதர்களினதும், ஜின்களினதும் முதல் நோக்கமாகும். அல்லாஹ் கூறுகிறான்,'ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை'. (அல்குர்ஆன் - 51 : 56)

3. ஓர் அடியானிடமிருந்து நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஏகத்துவமே அளவுகோலாகத் திகழ்கின்றது. நற்செயல்களுக்கான கூலி ஏகத்துவம் பூரணமடைவதிலேயே தங்கியுள்ளது. அதில் ஏதாவது குறைகளோ, ஏற்றத்தாழ்வுகளோ ஏற்பட்டால் நற்செயல்களுக்கான கூலி குறைந்து விடுவதோடு, சிலவேளைகளில் முழுமையாக அழிந்து விடக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.

4. மறுமை நாளில் வெற்றியடைய, சீரான இஸ்லாமிய கொள்கையே அவசியமாகின்றது. அதன் முக்கியத்துவத்தை அறிந்து, சரியான அமைப்பில் அதைக் கற்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,'யார் அல்லாஹ்வையே நாடி,'அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை' எனக் கூறுகின்றாரோ அவருக்கு அல்லாஹ் நரகினை ஹராமாக்கி விடுகின்றான்'. (அறிவிப்பவர்: இத்பான் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் - புஹாரி : 425, முஸ்லிம் : 33)

5. இது அல்லாஹ்வுக்கும், அடியானுக்குமிடையில் உள்ள தொடர்பை வரையறுக்கின்றது. அல்லாஹ் தன் அடியானுக்குத் தேவையான பாதுகாப்பு, அருட்கொடைகள் போன்றவற்றை வழங்கி வருகின்றான். இதற்காக அடியான் அல்லாஹ்வுக்குப் பயந்து, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி, அவன் எம்மை கண்காணிக்கிறான் என்பதை அறிந்து, வணக்க வழிபாடுகளை அவனுக்கு மாத்திரமே செய்ய வேண்டும்.

6. ஒரு மனிதனுக்கு உலகில் சந்தோசமும், மன அமைதியும் கிடைக்க காரணமாக அமைவது அவன் தன் இரட்சகனை அறிந்து கொள்வதுதான். எனவே மனிதன் தன் அனைத்து காரியங்களை விடவும் அல்லாஹ்வின் இறைமை, பரிபாலணம், அவனின் பெயர்கள், பண்புகள் போன்ற விடயங்களை அறிந்து அதன்படி அமல் செய்வதிலேயே தன்னை மும்முரமாக ஈடுபடுத்த வேண்டும்.

7. இஸ்லாமியக் கொள்கை மனிதனின் சிந்தனையில் தோன்றும் அனைத்து விதமான வினாக்களுக்கும், சந்தேகங்களுக்கும் விடை தருகின்றது. படைப்பாளனின் தன்மைகள், படைப்பின் ஆரம்பம், அதன் முடிவு, அது படைக்கப்பட்டதன் நோக்கம், இப்பிரபஞ்சத்தில் இருக்கும் பல்வேறுபட்ட படைப்பினங்கள், அவற்றுக்கும் எமக்கும் இடையில் இருக்கும் தொடர்புகள், கழா கத்ர் போன்ற மனித சிந்தையில் தோன்றும் அனைத்திற்கும் இது தீர்வை வழங்குகின்றது.

8. இக்கோட்பாட்டைப் புரிந்து கொள்ள முதலில் அல்குர்ஆனையும், ஸூன்னாவையும் கற்றுத் தேர்ல் வேண்டும். ஏனெனில் இவை இரண்டிலுமிருந்தே இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடு பெறப்பட்டிருக்கின்றது.

9. ஒரு மனிதனைச் சூழ இருக்கும் தீய சிந்தனைகள், சித்தாந்தங்கள், தவறான கொள்கை, கோட்பாடுகள் போன்ற அனைத்திலிருந்தும் இஸ்லாமியக் கோட்பாடு அவனை பாதுகாக்கின்றது.

எனவே இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த சரியான இக்கொள்கை (அகீதா இஸ்லாமிய்யா) மார்க்கம் எழுச்சி பெறுவதற்கு அடித்தளமாகவும், நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான பிரதான காரணியாகவும், இம்மை மறுமையில் வெற்றி இதிலேயே தங்கியுள்ளது என்பதையும் எடுத்தியம்புகிறது.

மேலும் அனைத்து நபிமார்களும் இக்கொள்கையின்பால்; தம்மக்களை வழிநடாத்தி இருக்கிறார்கள் என்பதையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

அல்லாஹ் கூறுகிறான், 'நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் (ஒருவராக) ஆவீராக!' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது'. (அல்குர்;ஆன் - 39 : 65)

இஸ்லாமியக் கோட்பாட்டின் மூலாதாரங்கள்

இஸ்லாமியக் கோட்பாடு முக்கிய மூன்று ஆதாரங்களின் அடிப்படையில் பெறப்படுவதாக அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஅத்தின் அறிஞர்கள் ஏகோபித்த முடிவில் இருக்கின்றனர். அதற்கு பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை ஆதாரமாக முன்வைக்கின்றனர்.

அல்லாஹ் கூறுகிறான், 'நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்), உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்!' (அல்குர்ஆன் - 04 : 59)

மேற்கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுதல் என்பது, அல்குர்ஆனையும், ஸூன்னாவையும், குறிக்கின்றது. அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்படுதல் என்பது, இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவுகளுக்கு கட்டுப்படுதலை குறிக்கின்றது.

முதல் ஆதாரம்

இதன் முதல் ஆதாரம் அல்குர்ஆன் ஆகும். இது பல சந்தர்ப்பங்களுக்கமைவாக 23 வருடங்கள் சிறு சிறு பகுதிகளாக ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதமாகும். இது சூரதுல் பாத்திஹாவைக் கொண்டு ஆரம்பித்து, சூரதுன் நாஸைக் கொண்டு முடிவடைகின்றது.

இது எவ்விதக் குறைபாடுகளுமற்ற, மனிதக் கையாடல் எதுவும் அடங்காத, பல அற்புதங்களை தன்னகத்தே கொண்ட அல்லாஹ்வின் பேச்சாகும். இதுவே இஸ்லாமிய கொள்கை பெறப்படும் முதல் மூல நூலாகும்.

அல்லாஹ் கூறுகிறான், 'அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும், தெளிவான வேதமும் வந்து விட்டன. அவனது திருப்தியை நாடுவோருக்கு இதன் மூலம் அல்லாஹ் ஈடேற்றத்தின் வழிகளைக் காட்டுகிறான். தன் விருப்பப்படி அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு செல்கிறான். அவர்களுக்கு நேரான வழியைக் காட்டுகிறான்'. (அல்குர்ஆன் - 05 : 15-16)

மேலும், 'நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனது தூதரையும், தனது தூதர் மீது அவன் அருளிய வேதத்தையும், இதற்கு முன் அவன் அருளிய வேதத்தையும் நம்புங்கள்!'. (அல்குர்ஆன் - 04 : 136)

 
இரண்டாம் ஆதாரம்

நபி (ஸல்) அவர்களிடமிருந்து உறுதியாக வந்த செய்திகள். இவை நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம், மற்றும் அவர்களின்; பண்புகள், தோற்றம் என்பனவற்றைக் குறிக்கின்றன. நபியவர்களின் வழிமுறைகளும் அல்குர்ஆனைப் போன்று வஹியுடன் சம்பந்தப்பட்டவையாகும். அல்குர்ஆன் கூறும் சுருக்கமான விடயங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், அல்குர்ஆனில் கூறப்படாத விடயங்களை தெளிவுபடுத்தக் கூடிய வகையிலும் ஸூன்னா (நபியவர்களின் வழிமுறை) இடம் பெறுகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான், 'நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (நபியே) கூறுவீராக!'. (அல்குர்ஆன் 03 : 31).

மேலும், 'மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்'. (அல்குர்ஆன் 16 : 44).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'என்னுடைய வழிமுறையை பின்பற்றுமாறு நான் உங்களை கட்டாயப்படுத்துகிறேன்'. (அறிவிப்பவர்: அல் இர்பாழ் இப்னு ஸாரியா (ரலி) ஆதாரம்: அபூதாவுத் : 4607, திர்மிதி : 2676)

 
மூன்றாம் ஆதாரம்

இஜ்மா (இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவுகள்). இது 'நபி (ஸல்) அவர்களின் பின்பு அவர்களின் சமுதாயத்தில் இருக்கும் முஜ்தஹிதீன்கள் ஒரு மார்க்க சட்டத்தில் ஒன்றுபடுதலே குறிக்கின்றது'. இது அடிப்படை மூலாதாரமாக அல்லாமல் துணை மூலாதாரமாக கொள்ளப்படுகின்றது.

மேலும் அல்குர்ஆனையும், ஹதீஸையும் அவை இறங்கும் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் விளங்கிய பிரகாரம் விளங்க முற்பட வேண்டும். இஸ்லாத்திலுள்ள அடிப்படைக் கொள்கை, வணக்க வழிபாடுகள், வழிகாட்டல்கள், நற்குணங்கள் அனைத்திலும் வஹி இறங்கும் காலத்தில் வாழ்ந்து, அதனை நேரடியாகப் பார்த்து அதன் பிரகாரம் அமல் செய்த அந்நபித்தோழர்களின் விளக்கங்களுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியமாகும்.



வினா இல  - 02
 
இஸ்லாமிய கோட்பாட்டின் முக்கிய மூலாதாரங்கள் மூன்றையும் கூறுக?

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget