வணக்கத்திற்கும் வழக்கத்திற்கும் மத்தியில் நபி (ஸல்) அவர்களின் செயற்பாடுகள் (பாகம் 02)


மனித இயல்பு, வழமை, வணக்கம் சார்ந்த ஸுன்னாக்கள்:
நபி (ஸல்) அவர்களுடைய எல்லா செயற்பாடுகளையும் நாம் ஸுன்னத்தாகக் கருத வேண்டுமா? அல்லது வணக்கம் என்ற அடிப்படையில் செய்த செயற்பாடுகளைத் தான் பின்பற்ற வேண்டுமா? என்ற அடிப்படையில் அறிஞர்கள் நபி (ஸல்) அவர்களுடைய செயற்பாடுகளை பல கோணங்களில் வகுத்துள்ளனர். சிலர் 3 வகைகளாகவும், இன்னும் சிலர் 5 வகைகளாகவும், இன்னும் சிலர் 7 வகைகளாகவும் வகுத்துள்ளனர். என்றாலும் இவையணைத்தையும் ஆய்வு செய்து பார்த்த சில அறிஞர்கள் எல்லா செயற்பாடுகளையும் மூன்று வகைக்குள் அடக்கலாம் என்கின்றனர். அவை :

1. மனித இயல்பு என்ற ரீதியில் நபியவர்கள் செய்த காரியங்கள்.

2. வழக்கம் என்ற ரீதியில் நபியவர்கள் செய்த காரியங்கள்.

3. வணக்கம் என்ற ரீதியில் நபியவர்கள் செய்த காரியங்கள்.

இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக சற்று அலசுவோம்.

மனித இயல்பு சார்ந்த செயல்கள் :

நபி (ஸல்) அவர்கள் ஏனைய மனிதர்களை விட்டும் வஹீ இறங்குவதன் மூலமே வேறுபடுகின்றார்கள். மனிதர்களுக்கு என்னென்ன இயற்கைத் தேவைகள் உள்ளனவோ அதே தேவைகள் நபியவர்களுக்கும் மனிதர் என்ற ரீதியில் உள்ளன. அது போன்ற இயற்கைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அவர்கள் நபி என்பதற்கும் சம்பந்தமில்லை. 
இவ்வாறு மனிதர் என்ற அடிப்படையில் நபியவர்கள் செய்த செயற்பாடுகள் இரண்டு வகைப்படுகின்றன :

1. நபியவர்கள் தேர்வு செய்யாமல் இயல்பாகவே ஏற்படக்கூடிய செயல்கள். உதாரணமாக : நபி (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியான விடயங்களைக் கேட்கும் போது அவர்களது முகம் பிரகாசமடையும். வெறுக்கும் செயலைக் காணும் போது அவர்களது முகத்திலே அது தென்படும். இனிப்புப் பண்டங்களை விரும்புவார்கள். உடும்பிறைச்சியை வெறுப்பார்கள். இது நபியவர்களையும் மீறி உள்ளத்தில் ஏற்படுகின்ற சில செயற்படுகள். அதனை அவர்களால் தவிர்க்க முடியாது. இதில் நபியவர்களைப் பின்பற்றுவது என்பதில்லை. வணக்கம் என்ற அடிப்படையிலல்லாமல் மனித இயல்பென்ற ரீதியில்தான் நபியவர்கள் இவ்வாறு நடந்து கொண்டார்கள்.
என்றாலும் விருப்பு, வெறுப்பக்களில் செயற்கையாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய பகுதியும் உள்ளதென்பதை இங்கு நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மார்க்கத்தில் ஏவப்பட்டுள்ள விடயங்களை விரும்புவார்கள். தடுக்கப்பட்டவைகளை வெறுப்பார்கள். இதில் நாம் அவர்களைப் பின்பற்றுவது அவசியமாகும். உதாரணமாக பெரும்பான்மையான நற்செயல்களில் நபியவர்கள் வலதை முற்படுத்துவதை விரும்புவார்கள். அதே போன்று பொய், பொய்யர்கள் மற்றும் நயவஞ்சகர்களை வெறுப்பார்கள். இவை மார்க்க அடிப்படையில் செயற்கையாக ஏற்படுத்திக் கொண்ட விருப்பு, வெறுப்புக்களாகும். அவற்றில் நாமும் நபியவர்களைப் பின்பற்ற வேண்டும்.

2. தேர்வு செய்து செய்யும் விடயங்கள். மனிதர் என்ற அடிப்படையில் அவை அத்தியவசியமானதாகவும் இருக்கின்றன. உண்ணல், பருகல், வெளிவாசல் செல்லல், ஆடையணிதல், நடத்தல், உட்காருதல், உறங்குதல் போன்ற இன்னோரன்ன செயற்களைக் குறிப்பிடலாம். இவை விரும்பியோ விரும்பாமலோ ஏற்படக்கூடிய செயற்பாடுகளல்ல. விரும்பினால் செய்யலாம், இல்லாவிடில் தவிர்ந்து கொள்ளலாம். என்றாலும் முற்றுமுழுதாக அவற்றைதத் தவிர்ந்து கொண்டால் விபரீதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றை நபியவர்கள் மார்க்க அடிப்படையில் செய்யவில்லை.

இதிலும் பின்பற்றுதல் கிடையாது. அடிப்படையில் இவை வணக்கமல்ல. உண்ணுவது ஸுன்னத் என்றோ, உறங்குவது ஸுன்னத் என்றோ யாரும் சொல்ல முடியாது. ஆனால் அவற்றை செய்யும் முறைகளை நபியவர்கள் காட்டித் தந்திருந்தால் அந்த முறைகளில் ஸுன்னத் வரும். உதாரணமாக, அடிப்படையில் உண்ணுவது ஸுன்னத்தல்ல. ஆனால் உண்ணும் முறையை நபியவர்கள் காட்டித்தந்துள்ளார்கள். அந்த முறையைக் கடைபிடிப்பது ஸுன்னத்தாகும். இந்த ஸுன்னத் செயலுக்கல்ல, செயல்முறைக்கென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உறங்குவது அடிப்படையில் ஸுன்னத்தல்ல. ஆனால் நபியவர்கள் இஷாவுக்குப் பின் அதிக நேரம் விழித்திருப்பதை வெறுத்துள்ளார்கள். அந்த அடிப்படையில் நேர காலத்துடன் தூங்குவது விரும்பத்தக்கதென்று சொல்லலாம்.

வழக்கம் சார்ந்த செயல்கள் :
நபி (ஸல்) அவர்கள் வழமையாக செய்து வந்த சில செயற்பாடுகள் உள்ளன. அவை வணக்கத்துடன் நேரடியாக தொடர்புபடாதவை. அவற்றை நபியவர்கள் தான் வாழ்ந்த ஊரின் வழக்கப்பிரகாரம் செய்து வந்துள்ளார்கள். உதாரணமாக : நபியவர்கள் தனது வாகனமாக அக்காலத்தில் வாகனங்களாகப் பயன்படுத்தப்பட்ட ஒட்டகம், குதிரை, கழுதை போன்றவற்றையே பயன்படுத்தி உள்ளார்கள். உணவு வகையில், பேரீத்தம் பழம், வாற்கோதுமை, அரிக்கப்படாத மாவினால் செய்யப்பட்ட உரோட்டி, சில சந்தர்ப்பங்களில் இறைச்சி, மோர், ஸரீத் என்ற ஒரு வகையுணவு போன்றவற்றையே பயன்படுத்தியுள்ளார்கள். இவைதான் அக்கால மக்களிடத்தில் பிரதான உணவாக இருந்தது. ஆடையை நோக்கினால், கவச ஆடை, வேட்டி, மேலங்கி, ஜுப்பா, தலைப்பாகை, தொப்பி போன்ற பல ஆடைகளை அணிந்துள்ளார்கள். இவை மக்கா மதீனாவில் அக்காலத்து மக்கள் பயன்படுத்திய ஆடைகளாகும். அதே போன்று நபியவர்கள் தனது தலை முடியை நீள வளர்த்திருந்தார்கள். சில சந்தர்ப்பங்களில் கத்தரித்துக் கொள்வார்கள். இது போன்ற விடயங்களை நபியவர்கள் தனது சமூகத்திற்கும் வழமைக்குமே விட்டுவிட்டார்கள். ஒவ்வோர் ஊரிலும் என்னென்ன வகை ஆடைகள் அணியப்படுகின்றனவோ அவற்றைத்தான் அவ்வூர்வாசிகள் அணியவேண்டும். ஏனெனில் ஒருவரைத் தனியாக எடுத்துக் காட்டும் வகையில் பிரபலாகும் நோக்கில் வித்தியாசமான ஆடைகளை அணிவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள். (அபூ தாவூத் 4029, இப்னு மாஜாஃ 3606, அஹ்மத் 5664). ஆண்கள் பெண்களைப் போன்றோ பெண்கள் ஆண்களைப் போன்றோ அணியக்கூடாது. கரண்டைக் காலுக்குக் கீழால் அணியக்கூடாது. காபிர்கள் பிரத்தியேகமாக அணியும் ஆடைகளையும் அணியக் கூடாது. இது போன்ற சில வரையறைகளுக்குட்பட்டு அந்தந்த ஊரில் அணியப்படும் எந்த ஆடையையும் அணியலாம். அதில் வெள்ளை நிற ஆடையை நபியவர்கள் விரும்பி அணிந்தது மாத்திரமல்லாமல் தூண்டியுமுள்ளார்கள். (அபூ தாவூத் 3878, திர்மிதீ 994, அஹ்மத் 2219). இதில் குறிப்பிட்ட ஆடை ஸ{ன்னத் என்று சொல்வதற்கு மேலதிகமான ஆதாரம் தேவை.

ஒருவர் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறான ஆடைகளை அணிந்துள்ளார்கள் என்று தானும் அது போன்ற ஆடைகளை அணிந்தால் அவரைக் குறைகூற முடியாது. கிண்டலடிக்கவும் கூடாது. அவர் நபியவர்கள் மீது வைத்திருக்கும் நேசத்தின் வெளிப்பாடுதான் அது. ஆனால் அதனை ஸுன்னத் என்று வாதாட முடியாது. அதற்கு மேலதிகமான ஆதாரங்கள் தேவை. இன்ன ஆடையை அணிந்தால் இன்ன நன்மையுண்டு என்று ஏதாவது ஒரு குறிப்பிட்ட ஆடையைப் பற்றி ஹதீஸ்கள்; வந்திருந்தால் அவ்வகை ஆடைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அதுவல்லாமல் நபியவர்கள் இன்னின்ன ஆடைகள் அணிந்துள்ளார்கள். ஸஹாபாக்கள் இன்னின்ன ஆடைகள் அணிந்துள்ளார்கள் என்ற எத்தனை ஆதாரங்களைத்தான் முன்வைத்தாலும் அவை அக்கால ஆடைப் பழக்கம் என்ற வகையில் அணிந்தார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

வணக்கம் சார்ந்த செயல்கள் :

நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கிலே செய்த செயல்களையே வணக்கம் என்கிறோம். இதனை எவ்வாறு நாம் அறிந்து கொள்வதென்றால் ஒரு செயலை நபியவர்கள் செய்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல் : 
  • அதனை ஏவியிருப்பார்கள்.
  • அல்லது ஆர்வமூட்டியிருப்பார்கள்.
  • சிறப்புக்களை எடுத்துக் கூறியிருப்பார்கள்
  • கிடைக்கும் நன்மைகளை சொல்லியிருப்பார்கள். 
உதாரணமாக, நபி (ஸல்) அவர்கள் தொழுது விட்டு ‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என்று கூறினார்கள். (புஹாரி 631). ஹஜ் செய்யும் போது ‘என்னிடமிருந்து உங்களது வணக்கங்களை (ஹஜ் முறை) எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்கள். (முஸ்லிம் 1297). அதேபோன்று நபியவர்கள் தர்மம் கொடுப்பார்கள். அதனைத் தூண்டியுமுள்ளார்கள். அல்குர்ஆன் ஓதியது மாத்திரமல்லாது அதனை ஓதுபவருக்குரிய நன்மையை சுட்டிக் காட்டியுள்ளார்கள். தாடி வைத்ததுடன் அதனை எமக்கும் ஏவியுள்ளார்கள். இவ்வாறு பல வணக்க வழிபாடுகளைத் தாம் செய்தது மாத்திரமல்லாமல் பிறருக்கும் அதனைச் செய்யுமாறு ஏவியும் தூண்டியுமிருப்பார்கள். அவற்றையே நாம் வணக்கம் என்ற ரீதியில் நபியவர்கள் செய்த செயல்கள் என்கிறோம். இவ்வகை செயற்பாடுகளைப் பொறுத்த வரையில் அவை வாஜிபாக அல்லாது ஸுன்னத்தாக இருக்கும். எனவே நபியவர்களுடைய ஒரு செயலை ஸுன்னத் என்று நாமும் செய்ய எத்தனிக்க முன் அதனை அவர்கள் வணக்கம் என்ற ரீதியில் தானா செய்தார்கள் என்பதை மேற்கண்ட வரையறைகள் மூலம் உறுதிப்படுத்தி விட்டே நாமும் செய்ய வேண்டும்.

வணக்கத்தையும் வழக்கத்தையும் பிரித்தரிய சில வழிகள் :

1. வணக்கத்தை நபியவர்கள் செய்ததுமட்டுமல்லாமல் அதனை மற்றவர்களுக்கு ஏவியோ, தூண்டியோ, அதிலுள்ள சிறப்புக்களை சுட்டிக்காட்டியோ, அதனால் கிடைக்கும் நன்மைகளை தெளிவு படுத்தியோ இருப்பார்கள். ஆனால் வழக்கம் எனும் போது அதனைச் செய்ததுடன் நிறுத்திக் கொண்டிருப்பார்கள். உடைகளில் வெள்ளை நிறத்தைத் தவிர இன்ன உடைகளை அணியுங்கள் என்றோ, இன்ன உடையை அணிந்தால் இத்தனை நன்மை என்றோ எந்தவொரு ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஸஹீஹான நபிமொழிகளிலும் இடம்பெறவில்லை. அதே போன்றுதான் உணவு, வாகனங்கள் ஆகியவற்றிலும். அதனை ஏற்கனவே கூறிய மார்க்க வரையறைகளுடன் எமது வழக்கத்திற்கே விட்டுள்ளார்கள். அவ்வாறு நபியவர்கள் அணிந்தார்கள், நபித் தோழர்கள் அணிந்தார்கள் என்று பல நபிமொழிகள் வந்தாலும் அதே ஆடைகளை நாமும் அணிவது ஸுன்னா எனக்கூறுவதற்கு மேற்கூறப்பட்ட வகையில் அலாதியான ஆதாரங்கள் தேவை.

2. வழக்கமான செயற்பாடுகளை நபியவர்கள் நபித்துவத்துக்கு முன்னரும், பின்னரும் செய்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்துக்கு முன்னரும் ஜுப்பா, தொப்பி, தலைப்பாகை, வேட்டி, சால்வை போன்றவற்றை அணிந்துள்ளார்கள். நபித்துவத்திற்குப் பின்னரும் அணிந்துள்ளார்கள். நபித்துவத்துக்கு முன்னர் நபியவர்கள் செய்த சில விடயங்களை நபித்துவத்திற்கப் பின்னர் வணக்கமாகக் காட்டித் தந்துள்ளார்கள். உதாரணமாக, இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மரபுகள் என்று நபி (ஸல்) அவர்கள் கத்னாச் செய்தல், தாடி வளர்த்தல், மீசை கத்தரித்தல் போன்றவிடயங்களை வழமையாக செய்து விட்டு நபித்துவத்திற்குப் பின் அதனை வணக்கமாகத் தூண்டியுள்ளார்கள். ஊர் வழமை, மனித இயல்பு என்ற ரீதியில் திருமணம் செய்து விட்டு நபித்துவத்திற்குப் பின் அதன் அடிப்படையை ஒரு வணக்கமாகப் பிரகடனப் படுத்தினார்கள். ஆடை விடயத்திலும் அவ்வாறிருந்தால் ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் அவை தெளிவுபடுத்தப்பட்டிருக்கும்.

3. வழமை என்ற ரீதியில் நபியவர்கள் செய்து வந்த வேலைகளை அக்காலத்துக் காபிர்களும் செய்துதான் வந்தார்கள். தொப்பி, தலைப்பாகை, சால்வை, ஜுப்பா, வேட்டி போன்றனதான் அவர்களுடையவும் ஆடைகளாக இருந்துள்ளன. நபியவர்கள் பயணித்த ஒட்டகம், குதிரை, கழுதை போன்றனதான் அவர்களுடையவும் வாகனங்களாக இருந்தன. எனவே இது வணக்கமாக இருந்தால் ஒரு தரப்பு செய்யாமல் விட்டிருப்பார்கள்.

மேற்கண்ட நபி (ஸல்) அவர்களின் செயற்பாடுகளில் வணக்கத்தைத் தவிர்ந்த ஏனைய இரு வகைகளின் குறைந்தபட்ச சட்டமாக அனுமதி என்பதையே நாம் எடுக்கலாம். ஏனெனில் நபியவர்களுடைய செயற்பாடுகளில் தடை செய்யப்பட்டவையோ வெறுக்கப்பட்டவையோ இருக்க மாட்டாது. வணக்கங்களில்தான் வாஜிப் அல்லது ஸுன்னத் என்ற சட்டம் வரும். என்றாலும் அவர்கள் வழமையாகச் செய்யும் ஒரு காரியத்தில் ஒரு வழிமுறையைக் காட்டியிருந்தால் அந்த செயலல்லாமல் அந்த வழிமுறை ஸுன்னத்தாகக் கணிக்கப்படும். இது பற்றி மேலே விளக்கியுள்ளேன். 

ஸுன்னா தர்கிய்யா :

நபி (ஸல்) அவர்கள் செய்யாமல் விட்ட விடயங்களை நாமும் விடுவது கடமையாக அல்லது ஸுன்னத்தாக சில சமயங்களில் அமையும். அது போன்ற சந்தர்ப்பங்களில் அதனைச் செய்வது பித்அத்தாகி விடும். நபி (ஸல்) அவர்கள் ஒன்றை விட்டார்களென ஸஹாபாக்கள் ஒன்றோ தெளிவாகக் கூறுவார்கள். அல்லது அச்செயலைச் செய்ததாக யாரும் ஆதாரபூர்வமாக அறிவித்திருக்க மாட்டார்கள். உதாரணமாக, நபி (ஸல்) அவர்கள் பெருநாள்த் தொழுகையை அதான், இகாமத் இன்றித் தொழுதார்கள் என்று ஸஹாபாக்கள் அறிவித்துள்ளார்கள். நாமும் அத்தொழுகையில் அதானையும் இகாமத்தையும் விடுவதே ஸுன்னத்தாகும். தொழுகையில் ஆரம்பத்தில் நிய்யத்தை வாயால் மொழிந்ததாகவோ, இறுதியில் நபியவர்கள் துஆ ஓத ஸஹாபாக்கள் ஆமீன் சென்னதாகவோ அவர்கள் யாரும் ஆதாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே அவற்றை நாம் செய்வது பித்அத்தாகி விடும். இவ்வாறு நபியவர்கள் செய்யாமல் விட்ட ஒன்றை நாமும் விடுவது ஸ{ன்னத் என்று சொல்ல இரு நிபந்தனைகள் உண்டு :

1. அச்செயலைச் செய்வதற்கான தேவைப்பாடு இருந்தும் அதனை அவர்கள் விட்டிருக்க வேண்டும். 
2. அதனைச் செய்வதற்கிருக்கும் தடைகள் இல்லாமலிருந்தும் அதனை விட்டிருக்க வேண்டும். 

உதாரணமாக தொழுகைக்குப் பின் துஆக் கேட்டால் அது ஏற்றுக் கொள்ளப்பட வாய்ப்புள்ள ஒரு சந்தர்ப்பம். அதுவும் நபியவர்கள் கேட்டு ஸஹாபாக்கள் ஆமீன் சொல்வதென்றால் இன்னும் அதிகவாய்ப்புள்ள சந்தர்ப்பம். அவ்வாறான தேவைப்பாடிருந்தும், அதனைச் செய்ய எந்த தங்குதடைகளும் இல்லாமலிருந்தும் நபியவர்கள் அதனைச் செய்யாமல் விட்டார்களென்றால் நாமும் அதனைத் தவிர்ந்து கொள்வதுதான் நபிவழி. மாறாக அதனைச் செய்வது நபியவர்கள் செய்யாத ஒரு பித்அத்தைச் செய்வதாகும். அதே போன்றுதான் மீலாத்விழாக்களும். ஸஹாபாக்களை நரகத்தின் விளிம்பிலிருந்து சுவனத்தின் வாயிலுக்கே அல்லாஹ்வின் உதாவியால் கொண்டு சென்றவர்கள் அந்த நபி (ஸல்) அவர்கள். அப்படிப்பட்ட ஒரு நபி பிறந்த தினத்தைக் கொண்டாடும் தேவை அந்த நபித்தோழர்களுக்கு நபியுடைய காலத்திலேயே இருந்திருக்காதா? மதீனாவில் இஸ்லாமிய ஆட்சி உருவானதும் அதனைச் செய்வதற்கான எந்தவித தடைகளும் இல்லாமலே இருந்தது. அவ்வாறிருந்தும் அந்த நபியோ அல்லது ஸஹாபாக்களோ மீலாத்விழாக் கொண்டாவில்லையென்றால் நாமும் அதனைக் கொண்டாடாமலிருப்பதே நபிவழி. இவ்வாறு பல உதாரணங்களைக் கூறிக் கொண்டே போகலாம்.

நபி (ஸல்) அவர்கள் ரமழானில் இரவுத்தொழுகை ஜமாஅத்தாகத் தொழ வேண்டிய தேவையிருந்தும் இரண்டு அல்லது மூன்று தினங்கள் தொழுகை நடத்தி விட்டு ஒரு தடைக்காக அதனை விட்டுவிட்டார்கள். அதுதான் அத்தொழுகை மக்கள் மீது ஜமாஅத்தாகவே தொழுவது கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம். எனவே அத்தடை நீங்கினால் அது மீண்டும் ஸுன்னத் என்ற நிலைக்கு வந்து விடும். இப்போது யாரும் நபியவர்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழாமல் விட்டார்களே. எனவே தனித்துத் தொழுவதுதான் ஸுன்னா என்று கூற முடியாது.

எனவே ஸுன்னாவை சரியான முறையில் விளங்கி அதன்படி நடக்கவும், பித்அத்களை இணங்கண்டு அவற்றைத் தவிர்ந்து கொள்ளவும் வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் துணை புரிவானாக.

முற்றும்.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget