வஸீலா (இறைவனை நெருங்குதல்) ஒரு இஸ்லாமிய கண்ணோட்டம்

லஸீலா ஓர் கண்ணோட்டம்
BA (Hons), MA Reading
ஹதீஸ் மற்றும் ஹதீஸ் அறிவியல் பிரிவு.
அல் இமாம் முஹம்மத் பின் சவ்த் இஸ்லாமிய பல்கலைக்கழகம் - ரியாத்

அறிமுகம் :
மனிதனைப் படைத்த அல்லாஹ் அவனுக்குப் பல தேவைகளையும் வைத்துள்ளான். அத்தேவைகளில் முடியுமானவற்றை அவன் தனியாகவோ, பிறரின் உதவியுடனோ நிறைவேற்றிக் கொள்கின்றான். அவ்வாறு நிறைவேற்ற முடியாத பல தேவைகளும் அவனுக்குள்ளன. அவற்றைத் தனது இறைவனிடம் கேட்டுப் பெற்றுக் கொள்கின்றான். அதனையே நாம் பிரார்த்தனை (துஆ) என்கிறோம். அடிப்படையில் பிரார்த்தனை என்பது ஒரு வணக்கமே. எனவே வணக்கமென்று ஒன்று முடிவு செய்யப்பட்டால் அது அல்லாஹ்வுக்கு மாத்திரமே செலுத்தப்பட வேண்டும்.

ஒரு மனிதன் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது இரு வழிகளைக் கையாள்கின்றான். ஒன்று : தான் கேட்க விரும்பும் விடயத்தை அல்லாஹ்விடம் நேரடியாகவே கேட்டு விடுகின்றான். உதாரணமாக, நிவாரணத்தைக் கேட்கும் ஒரு நோயாளி ‘யாஅல்லாஹ், என்னைக் குணப்படுத்துவாயாக’ என்று நேரடியாகவே கேட்டு விடுகின்றான். மற்றது தான் பிரார்த்திக்கும் போது தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் ஒரு சாதனத்தை வைத்துக் கேட்கின்றான். இதனையே வஸீலா எனப்படுகின்றது. எனவே பொதுவாக ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து வழிமுறைகளும் வஸீலா எனப்படுகின்றது.

அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள வஸீலா :

அல்குர்ஆனில் இரு வசனங்களில் இந்த வஸீலா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

1. {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ}

முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்;. அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை(வணக்கங்களின் மூலம்) தேடிக் கொள்ளுங்கள்;. (அல் மாஇதா : 35)

2. {أُولَئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَه}
அவர்களில் மிகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் கூட தங்கள் இறைவன்பால் (கொண்டு செல்ல) நற்கருமங்களை செய்து கொண்டும் அவனது அருளை எதிர்பார்த்தும் அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றனர்.

மேற்கண்ட இரு வசனங்களிலும் கூறப்பட்டுள்ள வஸீலா என்பது அல்லாஹ்வின்பால் நெருங்குவதையே குறிக்கின்றது. அந்த வகையில் அல்லாஹ்வின்பால் நெருக்கமாக்கி வைக்கும் அனைத்து வணக்கங்களும் வஸீலா எனப்படும். இக்கருத்தையே இப்னு அப்பாஸ் (ரலி), மற்றும் அபூ வாஇல் (ரஹ்), ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்), கதாதா (ரஹ்) போன்ற தாபிஈன்களும் இமாம்களான இப்னு ஜரீர் அத்தபரீ, இப்னு கஸீர், இப்னு ஹஜர் போன்றோரும் கூறியுள்ளனர்.

ஆனால் தற்போது பழக்கத்தில், அல்லாஹ்வுக்கும் எங்களுக்குமிடையில் ஒரு சாதனத்தைப் பயன்படுத்திப் பிரார்த்திப்பதே வஸீலா எனப்படுகன்றது. இஸ்லாத்தில் இதன் நிலைப்பாடென்ன என்பதைத் தெளிவு படுத்துவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

ஆரம்பகாலத்தில் அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள கருத்திலேயே வஸீலா நோக்கப்பட்டது. பிற்காலத்தில் இணைவைப்புக்குத் துணைபோகும் பல நூதனங்கள் இந்த வஸீலா என்ற பெயரில் உட்புகுத்தப்பட்டதாலேயே இதை ஒரு தனித்தலைப்பாக இஸ்லாமிய அகீதாவில் (அடிப்படைக் கொள்கை) முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பேசப்பட்டது. இது பற்றிப் பல அறிஞர்கள் தனியாக நூல்களையும் எழுதியுள்ளனர். அவற்றுள் சில :

1. قاعدة في التوسل والوسيلة (இமாம் இப்னு தைமியாவுக்குரியது)
2. التوصل إلى حقيقة التوسل (அஷ்ஷேஹ் முஹம்மத் நஸீப் அர்ரிபாஈ என்பவருக்குரியது)
3. التوسل أنواعه وأحكامه  (அஷ்ஷேஹ் அல்பானீக்குரியது)
4. التوسل المشروع والممنوع (அஷ்ஷேஹ் அப்துல்லாஹ் அல்அஸரீக்குரியது)
5. التوسل في كتاب الله عز وجل (அஷ்ஷேஹ் தலால் பின் முஸ்தபா என்பவருக்குரியது)

வஸீலாவின் வகைகள் :
மனிதன் பிரார்த்திக்கும் போது தனக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் முன்னிலைப்படுத்தும் சாதனங்களின் அடிப்படையில் வஸீலாவை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. அனுமதிக்கப்பட்ட வஸீலா.
2. தடுக்கப்பட்ட வஸீலா.
எனவே வஸீலாவுக்குக் கூடும் அல்லது கூடாதென்று பொதுவான ஒரு சட்டத்தை வழங்க முடியாது. மாறாக அதில் மேற்கண்ட இரு வகைகளும் அடங்கும்.

அனுமதிக்கப்பட்ட வஸீலா முறை :
நாம் பிரார்த்திக்கும் போது இஸ்லாம் காட்டிய சாதனங்களை வைத்து எமது தேவைகளை வேண்டுவதே அனுமதிக்கப்பட்ட வஸீலாவாகும். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட சாதனங்கள் இரு வகைப்படும்.
1. அல்லாஹ்வுடன் தொடர்புடையவை.
2. படைப்பினங்களுடன் தொடர்புடையவை.

அல்லாஹ்வுடன் தொடர்புடைய சாதனங்களை வைத்து வஸீலாத் தேடுவதென்றால் அவனது பெயர்களை அல்லது பண்புகளை முன்னிலைப்படுத்தி எமது தேவைகளைக் கேட்பதாகும். பாவமன்னிப்புக் கேட்கும் ஒருவர் ‘யா அல்லாஹ் என்னை மன்னித்துவிடு’ என்று நேரடியாகக் கேட்காமல் ‘மன்னிக்கும் நாயனே என்னுடைய பாவத்தை மன்னித்துவிடு’ என்று கேட்பதை இவ்வகை வஸீலாவுக்கு உதாரணமாகக் கொள்ளலாம். இங்கு மன்னிப்பவன் (غفور) என்ற அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்திக் கேட்டுள்ளோம். இதற்கு ஆதாரமாகப் பின்வரும் இறைவசனத்தைக் கூறலாம் : ‘அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்.’ (அஃராப் : 180). மேலும் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் நபியவர்களைத் தொட்டும் அறிவிக்கும் இடர், கஷ்ட நேரத்தில் ஓதும் துஆவையும் இதற்கு சான்றாக எடுத்துக் கொள்ளலாம். அந்த துஆவில் உனக்கே உரிய எல்லாப் பெயர்களைக் கொண்டும் உன்னிடம் கேட்கின்றேன் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.  (அஹ்மத் 3712)

படைப்பினங்களை முன்னிலைப்படுத்தி வஸீலாத் தேடுவதனையும் இரு வகைகளாக நோக்கலாம்.

1. தான் செய்த நற்காரியத்தை முன்வைத்துப் பிரார்த்தித்தல்.

2. நல்லடியார்களின் பிரார்த்தனை மூலம் வஸீலாத் தேடுதல்.

தான் செய்த நற்காரியத்தை முன்னிலைப்படுத்தி துஆக் கேட்பதும் அனுமதிக்கப்பட்ட வஸீலா முறைகளில் ஒன்றாகும். துன்பங்களிலிருந்து விடுபட துஆக் கேட்கும் ஒருவர் ‘யா அல்லாஹ், நான் உன்னை ஈமான் கொண்டிருக்கின்றேன். எனவே எனது துன்பங்களை நீக்கி விடுவாயாக’ என்று பிரார்த்திப்பதை உதாரணமாகக் கொள்ளலாம். இங்கு ஈமான் என்ற நற்செயலை முன்னிறுத்திக் கேட்கப்படுகின்றது. பின்வரும் இறைவசனம் இதற்கு சான்று பகர்கின்றது : ''எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; ''எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்களை நல்லோர்களுடன் மரணிக்கச் செய்வாயாக"" (ஆல இம்ரான் : 193). இங்கு நல்லடியார்கள் பாவமன்னிப்புத் தேடும் போது தாம் நபியவர்களின் அழைப்புக்குப் பதிலளித்ததை முன்னிறுத்திக் கேட்கின்றனர். மேலும் குகையில் அடைபட்ட மூவரின் சம்பவம் (புஹாரி 5974, முஸ்லிம் 2743) இவ்வகை வஸீலாவிற்கு இன்னும் உரமூட்டுகின்றது. அதில் அம்மூவரும் தமது விடுதலையை நேரடியாகக் கேட்காமல் தாம் ஒவ்வொருவரும் செய்த நற்காரியத்தை வஸீலாவாக முற்படுத்திக் கேட்டனர்.

மார்க்கப்பற்றுள்ள நல்லடியார்களென்று எதிர்பார்க்கப்படும் ஒருவரை துஆக் கேட்க வைப்பதன் மூலம் வஸீலாத் தேடுவது படைப்பினங்களை முன்னிலைப்படுத்துவதன் மற்றொரு பகுதியாகும். நாம் பிரார்த்திக்க வேண்டுகின்ற நபர் அவ்வமயம் உயிருடனிருக்க வேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில் இதுவும் அனுமதிக்கப்பட்ட வஸீலா முறைகளில் ஒன்றாகும். சர்வ சாதாரணமாக நாம் ஹஜ், உம்ராச் செல்வோரிடம் எமக்காக துஆக் கேளுங்கள் என்று வேண்டுவதனேயே இதற்கு உதாரணமாக எடுக்கலாம். வெள்ளிக்கிழமை தினமொன்றில் நபியவர்கள் பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் வேளை ஒருவர் வந்த அல்லாஹ்விடம் மழை வேண்டித்தருமாறு கேட்ட சம்பவத்தையும் (புஹாரி 1013, முஸ்லிம் 893) , வலிப்பு நோயுள்ள ஒரு பெண்மணி  நபியவர்களிடம் வந்து தனது நோய் குணமடைய அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு வேண்டியதையும் (புஹாரி 5652, முஸ்லிம் 2576) , உமர் (ரலி) அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் மதீனாவில் பஞ்சம் ஏற்பட்ட போது அப்பாஸ் (ரலி) அவர்களின் துஆவின் மூலம் மழை வேண்டியதையும் (புஹாரி 1010) இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.

தடுக்கப்பட்ட வஸீலா முறைகள் :
இஸ்லாம் காட்டித்தராத முறையில் மேற்கொள்ளப்படும் வஸீலாக்களே தடுக்கப்பட்ட வஸீலாவாகும். அல்குர்ஆனிலோ, ஸஹீஹான ஹதீஸ்களிலோ இடம்பெறாத, ஸலபுஸ் ஸாலிஹின்களின் வழமையில் காணப்படாத விதத்தில் வஸீலாத் தேடுவது தடுக்கப்பட்ட முறைகளிலுள்ளதாகும். இதிலும் சில வகைகளுள்ளன.

1. தனிநபரின் பொருட்டால் வஸீலாத் தேடுதல்.
அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது அவனது படைப்பினங்களில் ஒருவரின் பொருட்டால் அல்லது அவருடைய பதவியை, கண்ணியத்தை வைத்துக் கேட்டால் அது பித்அத்தான முறையாகும். ஒருவர் இறைவா! நபி (ஸல்) அவர்களின் பொருட்டால் அல்லது முஹியத்தீன் அப்துல் காதிர் (ரஹ்) அவர்களின் பொருட்டால் எனக்கு நிவாரணமளிப்பாயாக என்று கேட்பதை உதாரணமாகக் கூறலாம். இவ்வாறு நபியவர்கள் தனது பொருட்டால் கேட்கச் சொன்னதாகவோ அல்லது நபித்தோழர்கள் அவ்வாறு கேட்டதாகவோ எந்தவித ஸஹீஹான ஆதாரங்களுமில்லை.

2. மரணித்த ஒருவரின் துஆ மூலம் வஸீலாத் தேடுதல்.
மண்ணறை அல்லது தர்காவில் அடங்கப்பட்டிருப்பவரிடம் சென்று, தனது தேவையை அல்லாஹ்விடம் கேட்டுப் பெற்றுத்தருமாறு வேண்டுவதும் தடுக்கப்பட்ட வஸீலா முறைகளிலொன்றாகும். நேரடியாக அவரிடமே குறிப்பிட்ட தேவையைக் கேட்பது ஷிர்க்காகி விடுகின்றது. அவ்வாறில்லாமல் அல்லாஹ்விடம் கேட்டுப் பெற்றுத்தரும்படி மரணித்தவர்களிடம் வேண்டினால் அதுவும் மடமையின் ஒரு பகுதியென்றே கூற வேண்டும். ஏனெனில் ஒருவர் மரணித்தவுடன் அவருடைய செயற்பாடுகளெல்லாம் ஸ்தம்பிதமாகிவிடுகின்றன. இந்நிலையில் அவர் எவ்வாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்து இவருடைய தேவையை நிறைவேற்றலாம்? இதனால்தான் நபியவர்கள் மரணிக்கும் வரை அவர்களின் துஆவின் மூலம் மழையைப் பெற்றுக் கொண்ட நபித்தோழர்கள் அவர்கள் மரணித்ததும் அப்பாஸ் (ரலி) அவர்களின் துஆவை நாடிச் சென்றனர்.

3. சமாதிகள், இறைநேசர்களிடம் நேரடியாகப் பிரார்த்திப்பதன் மூலம் வஸீலாத் தேடுதல்.

இவ்வகை வஸீலா, நபியவர்கள் காலத்தில் குரைஷிக் காபிர்கள் வைத்த இணைவைப்பை விட புதிதாக ஒன்றுமில்லை. இவர்கள் இவ்விரண்டு வகை வஸீலாவுக்கும் கற்பிக்கும் நியாயம் விநோதமானது. உலகில் ஒரு நாட்டுத் தலைவரிடம் சாதரண பிரஜைகள் செல்வதாயிருந்தால் அமைச்சர்கள், மந்திரிகளின் உதவி தேவைப்படுகின்றது. அது போன்றுதான் அல்லாஹ்விடம் நெருங்க இறைநேசர்களின் உதவி தேவைப்படுகின்றது என்பதே இவர்கள் கூறும் நியாயம். இதன் மூலம் படைத்தவனையும் படைப்பினங்களையும் ஒன்றாக நோக்கியதுடன், இதே விடயத்தைத்தான் குரைஷக் காபிர்களும் கூறினார்கள். ‘இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ''அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை"" (என்கின்றனர்)’. (ஸ{மர் : 03). எனவே இவ்விறுதிவகை வஸீலாவானது பித்அத் என்று சொல்வதை விட இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் ஷிர்க் என்பதே தெளிவாகின்றது. சுருக்கமாகக் கூறின் வஸீலாவில் பல வகைகள் உள்ளன. அவை :
1. அல்லாஹ்வின் பெயர் மற்றும் பண்புகளைக் கொண்டு வஸீலாத் தேடுதல்.
2. தான் செய்த நற்காரியத்தைக் கொண்டு வஸீலாத் தேடுதல்.
3. உயிரோடுள்ள நல்லடியார்களின் பிரார்த்தனை மூலம் வஸீலாத் தேடுதல்.
4. நபிமார்கள் இறைநேசர்களின் பொருட்டால் அல்லது பதவியால் வஸீலாத் தேடுதல்.
5. மரணித்தோரின் பிரார்த்தனை மூலம் வஸீலாத் தேடுதல்.
6. மரணித்தேரிடம் பிரார்த்திப்பதன் மூலம் வஸீலாத் தேடுதல்.
இவற்றில் முதல் மூன்றும் அனுமதிக்கப்பட்டதாகவும், இறுதி மூன்றும் தடுக்கப்பட்டதாகவும் உள்ளன என்பதை இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும்.

சந்தேகங்களும் தெளிவுகளும் :
பொதுவாக வஸீலாவின் அனைத்து வகைகளையும் அனுமதிப்போர் தமது கருத்தை நியாயப்படுத்த சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர். அவற்றைப் பரிசீலனை செய்து பார்க்கும் போது அவற்றில் சில ஸஹீஹான ஆதாரங்களாக இருப்பினும் தடுக்கப்பட்ட வஸீலா முறைகளை அனுமதிப்பதற்கான சான்றுகள் எதுவும் அவற்றிலில்லை. மற்றும் சில ஆதாரங்களில் தகுந்த சான்றுகள் இருப்பினும் அவை மிகவும் பலவீனமான அல்லது இட்டுக்கட்டப்பட்ட, ஆதாரத்திற்கு எடுக்க முடியாத செய்திகளாகவே உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றை இங்கு நோக்குவோம்.

சந்தேகம் 01 :
புஹாரியில் இடம்பெறும் உமர் (ரலி) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்கள் மூலம் மழை வேண்டிப் பிரார்த்தித்த செய்தியை, இன்னொருவரின் பொருட்டால் அல்லது பதவியால் வஸீலாத் தேடலாம் என்பதற்கான ஆதாரமாக சிலர் முன்வைக்கின்றனர்.

தெளிவு :
அப்பிரார்த்தனையின் வாசகம் இவ்வாறுதான் உள்ளது :
اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا، وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا (இறைவா! எமது நபியின் மூலம் உன்னிடத்தில் வஸீலா தேடினோம். அதன் மூலம் நீ மழை பொழிவித்தாய்!. தற்போது எமது நபியின் சிறிய தந்தையின் மூலமாக வஸீலா தேடுகிறோம். எங்களுக்கு மழை பொழிவிப்பாயாக).

இங்கு உமர் (ரலி) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களின் பதவியை வைத்துக் கேட்டார்களா? அல்லது பிரார்த்தனை மூலம் கேட்டார்களா? என்பது தெளிவில்லை. இதனை பிரார்த்தனை மூலம் மழை வேண்டியுள்ளார்கள் என்றுதான் நாம் விளங்க வேண்டும். ஏனெனில் நபியவர்களுடையவும் அப்பாஸ{டையவும் பதவியை வைத்துக் கேட்பதாயிருந்தால் நபி (ஸல்) அவர்களை விட்டுவிட்டு அப்பாஸ் (ரலி) அவர்களை அழைத்து வரவேண்டிய அவசியமில்லை. நபியவர்களின் கண்ணியமும் பதவியும் இருக்கும் போது அப்பாஸ் (ரலி) அவர்களின் பதவியும் கண்ணியமும் எதற்கு? மேலும் நபி (ஸல்) அவர்களின் பதவியும் கண்ணியமும் அவர்கள் உயிருடனிருக்கும் போது எவ்வாறு மகத்தானதாக இருந்ததோ அதே போன்று மரணித்த பின்பு சிறிதளவும் குறையாமல் உள்ளது. எனவே உமர் (ரலி) அவர்கள் வீட்டிலிருந்து கொண்டே நபியவர்களின் பொருட்டால் மழை வேண்டியிருக்கலாம். அப்பாஸ் (ரலி) அவர்களை அழைத்து வர வேண்டிய தேவையுமில்லை. அவர்கள் பிரார்த்திக்க வேண்டிய தேவையுமில்லை.

உமர் (ரலி) அப்பாஸ் (ரலி) அவர்களை அழைத்து வந்தது அவர்களின் பொருட்டால் வஸீலாத் தேடுவதற்கல்ல. அவர்களின் பிரார்த்தனை மூலம் வஸீலாத் தேடவே என்பது தெளிவாகின்றது. இது நல்லாடியார்களின் பிரார்த்தனை மூலம் கேட்கும் அனுமதிக்கப்பட்ட வஸீலா முறையாகும். நபியுடைய காலத்திலும் அவர்களின் பொருட்டாலன்றி அவர்களது பிரார்த்தனை மூலமே மழை வேண்டியுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். முன்னர் கூறப்பட்ட வெள்ளிக்கிழமை தினத்தினில் நபியவர்களிடம் மழை தேடி வந்த சம்பவமும் இதற்கு சான்று பகர்கின்றது. உமர் (ரலி) அவர்கள் போன்றே முஆவியா (ரலி) அவர்களும் யஸீத் பின் அல்அஸ்வத் (ரஹ்) என்ற தாபிஈன்களைச் சேர்ந்த ஒருவரின் துஆ மூலம் மழை வேண்டியுள்ளார்கள் என்பதும் ஆதாரபூர்வமாகப் பதிவாகியுள்ளது. (தபகாத் இப்னு ஸஃத் 3811, தாரீஃக் இப்னி அஸாகிர் 8240, அஷ்ஷேக் அல்பானீ இந்த அறிவிப்பை சரிகண்டுள்ளார்கள்.)

சந்தேகம் 02 :
ஒரு பார்வையிழந்த ஸஹாபி நபியவர்களிடம் வந்த தனக்குப் பார்வை கிடைத்திடப் பிரார்த்திக்குமாறு வேண்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் அம்மனிதருக்கு வுழூச் செய்த கொண்டு வருமாறு பணித்து பின்வரும் துஆவைக் கேட்கும்படி கற்றுக் கொடுத்தார்கள். اللهم إني أسألك وأتوجه إليك بنبيك..... (இறைவா! உன்னிடம் நான் கேட்கிறேன். உனது நபியின் மூலம் உன்னிடம் நெருங்கி வருகிறேன்……) (திர்மிதீ 3578, இப்னு மாஜாஃ 1385). இதில் நபி (ஸல்) அவர்களின் பொருட்டால் அந்த ஸஹாபி வஸீலாத் தேடியதாக சிலர் கூறுகின்றனர்.

தெளிவு :
1. இந்த ஸஹாபி நபியுடைய பொருட்டால் வஸீலாத் தேடவில்லையென்பது நபிமொழியை முழுமையாக வாசிக்கும் போது புரிந்து கொள்ளலாம். ஏனெனில் அதில் ‘நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. எனவே இது அனுமதிக்கப்பட்ட நல்லடியார்களின் துஆவின் மூலம் வஸீலாத் தேடுவதிலேயே அடங்குகின்றது.
2. அவர் நபியின் பொருட்டால் கேட்டிருந்தால் பார்வையுமில்லாமல் சிரமப்பட்டு நபியிடம் வந்திருக்க வேண்டிய அவசியமில்லை. வீட்டிலிருந்தே கேட்டிருக்கலாம்.
3. நபியவர்களின் துஆவின்றி அவர்களின் பொருட்டால் இழந்த பார்வையை மீளப்பெற முடியுமென்றால் இன்று அதே வழியை அனைத்துப் பார்வையற்றோரும் கடைபிடித்திருப்பர். உலகில் குருடர்களே இருக்க மாட்டார்கள்.

சந்தேகம் 03 :
சுவனத்தில் ஆதம் (அலை) அவர்கள் தவறிழைத்த வேளை நபி (ஸல்) அவர்களின் பொருட்டால்தான் இறைவனிடம் மன்னிப்புக் கோரினார்கள். (ஹாகிம் 4228)

தெளிவு :
இச்சம்பவம் இட்டுக்கட்டப்பட்ட பொய்ச் சம்பவமென இமாம் தஹபீ (ரஹ்) அவர்கள் உட்பட பல அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே இதனைத் தடுக்கப்பட்ட வஸீலாவை அனுமதிக்கத் தக்க ஆதாரமாகக் கொள்ள முடியாது.

சந்தேகம் 04 :
توسلوا بجاهي ؛ فإن جاهي عند الله عظيم என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டள்ளது. (எனது பதிவ, கண்ணியத்தைக் கொண்டு நீங்கள் வஸீலாத் தேடுங்கள். ஏனெனில் அல்லாஹ்விடத்தில் எனது பதவி, கண்ணியம் மகத்தானது.)

தெளிவு :
இச்செய்தி எந்தவொரு ஹதீஸ் நூல்களிலும் இடம்பெறாத இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

எனவே அல்குர்ஆன், ஹதீஸ் ஆதார அடிப்படையில் உருவான வஸீலா முறைகளை மாத்திரமே நாம் பயன்படுத்த வேண்டும். ஏனையவை ஒன்றோ ஷிர்க்காக அல்லது ஷிர்க்கிற்கு இட்டுச்செல்லக் கூடியதாக உள்ளன என்பதையும் நாம் புரிந்து அவற்றை முழுமையாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் துணை புரிவானாக.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget