ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 26)



பாடம் 03 -  மார்க்க அறிஞர்கள் ஓர் அறிமுகம்
3.1. ஸஹாபாக்களில் மார்க்க அறிஞர்கள்
    நபி (ஸல் ) அவர்களின் பின்பு ஸஹாபாக்களே மார்க்க சட்டங்களை மிகவும் அறிந்தவர்களாக காணப்பட்டனர். அதனால் மக்கள் அவர்களுக்கு ஏற்படும் மார்க்க பிரச்சினைகளை அவர்களிடமே கேட்கக்கூடியவர்களாக இருந்தனர், அவர்களில் அதிகமானவர்கள் மார்க்க தீர்ப்பு வழங்குபவர்களாக காணப்பட்டனர். அவர்களில் மிகவும் பிரபல்யமானவர்களாக  நான்கு கலிபாக்களும், ஆயிஷா, ஹப்ஸா, அனஸ் இப்னு மாலிக், அபூ ஹுரைரா, அப்துல்லாஹ் இப்னு அம்ர், அபூ அய்யூப், ஸைத் இப்னு ஸாபித், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், அப்துல்லாஹ் இப்னு உமர், ஸுபைர் இப்னுல் அவ்வாம், அபூ மூஸா, அபூ தர்தா, அபூ ஸஈத் ( ரலியல்லஹு அன்ஹும் ) போன்றோர் காணப்பட்டனர்.
3.2. தாபிஈன்களில் மார்க்க அறிஞர்கள் .
    உர்வத் இப்னு ஸுபைர், ஸஈத் இப்னு முசைய்யப், அல்காசிம் இப்னு முஹம்மத், ஹாரிஜா இப்னு ஸைத், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ், அபூ பக்ர் இப்னு அப்துர்ரஹ்மான், சுலைமான் இப்னு யசார் போன்றோர்கள் பிரபல்யமானவர்களாவார். இவர்கள் ‘’ அல் புக்கஹாஹுஸ் சப்ஆ ‘’ என்று அழைக்கப்படுவர்.  
3.3. மத்ஹப்கள் ஓர் அறிமுகம்.
    ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இஸ்லாம் வேகமாகப் பரவியது. பல மொழிகளையும் கலாச்சாரங்களையும் சார்ந்த அரபியல்லாத பலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். இதனால் மார்க்கம் தொடர்பான புதிய பிரச்சினைகள் தோன்றின. அவற்றுக்கு இஸ்லாமியத் தீர்வை வழங்க வேண்டிய பொறுப்பு அன்றைய அறிஞர்களைச் சார்ந்திருந்தது. அவர்கள் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் நுணுக்கமாக ஆராய்ந்து தீர்ப்புகளை முன்வைத்தார்கள்.
இவ்வாறு அல்குர்ஆன் ஸுன்னாவின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் அறிஞர்கள் முஜ்தஹித்கள் எனப்படுவர். இவர்கள் ஈடுபட்ட துறை பிக்ஹுத்துறை என அழைக்கப்படும். இத்தகைய அறிஞர்கள், தம்மிடம் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு, தமக்குக் கிடைத்த அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஆதாரங்களை வைத்துத் தீர்ப்பு வழங்கினார்கள் ஏற்கனவே அவர்கள் அல்குர்ஆன், அல்ஹதீஸ் போதனைகளை வகுப்புகளாக நடாத்தி வந்தமையால் சட்டப் பிரச்சினைகளின் தீர்வுகளை மக்களின் முன் வைத்தனர்.
இவ்வாறு பாட போதனைகளை நடாத்தியும், பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியும் பங்களிப்புச் செய்தவர்களில் ஒரு  சிலர் குறிப்பிடத்தக்கவர்களாகத் திகழ்ந்தனர். அவர்களுள் இமாம்களான அபூ ஹனீபா ( ரஹ்  ), மாலிக் ( ரஹ் ), ஷாபிஈ ( ரஹ் ), அஹ்மத் இப்னு ஹன்பல் ( ரஹ் ) ஆகிய நால்வரும் ஒரு தனிப்பட்ட இடத்தைப் பெற்று மக்களுக்கு மத்தியில் பிரகாசிக்கிறார்கள். பிற்காலத்தில் இவர்களது கருத்துக்களும் தீர்ப்புகளும் மத்ஹப் என்ற பெயரில் வளர்ச்சியடைந்தன.
3.3.1. இமாம் அபூ ஹனீபா ( ரஹ் ).
    இமாமவர்கள் சிறு வயதிலேயே அறிவும் ஆற்றலும் உடையவராகத் திகழ்ந்தார்கள். எனினும் தொடர்ந்து படிக்க முடியாமல் தந்தையின் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது திறமையை அவதானித்த இமாம் ஷஅபி ( ரஹ் ) அவர்கள் படிப்பைத் தொடருமாறு  அவரைத் தூண்டினார். தொடர்ந்து படித்த அவர் பிற்காலத்தில் சிறந்த அறிஞராகப் பாராட்டப்பட்டார்.
     கூபாவில் ஹம்மாத் இப்ன் சுலைம் ( ரஹ் ) என்ற அறிஞரிடம் கற்றார். அவரது திறமையை கண்ட ஆசிரியர் தமது கலாபீடத்தில் இவரை உதவியாளராக அமர்த்திக் கொண்டார். பல வருடங்கள் ஆசியருடன் சேர்ந்து பிக்ஹுத் துறையில் நிபுணத்துவம் பெற்றார். ஆசிரியர் மரணித்த போது அவரது இடத்துக்கு இமாம் அபூ ஹனீபா ( ரஹ் ) அவர்களே நியமிக்கப்பட்டார்கள்.
     இவரிடம் தர்க்க ரீதியாக கருத்துக்களை முன்வைக்கும் திறமை காணப்பட்டது. அது பிக்ஹுப் பிரச்சினைகளை தெரிந்து கொள்வதற்கும் அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவதற்கும் பேருதவியாக அமைந்தது. பிக்ஹுப் பிரச்சினைகள் அதிகரித்திருந்த அக்காலத்தில் இமாம் அபூ ஹனீபா ( ரஹ் ) அவர்கள் கூபாவிலிருந்து அறிஞர்களை ஓன்று கூட்டினார். கூபா ஜாமிஉ மஸ்ஜிதில் ஓன்று கூடிய அறிஞர்களுடன் நீண்ட கலந்துரையாடல்களை நடத்தினார். கூட்டு முயற்சியாக சட்டத் தீர்ப்புகளை கண்டறிந்தார். அவற்றை எழுத்துருவில் தொகுத்தார். அது பிக்ஹுல் அக்பர் எனும் பெயரில் முதலாவது எழுத்து வடிவிலான பிக்ஹுத் தொகுப்பாக வெளியாகியது.
     இது தவிர அல் ஆலிம் வல் முதஅல்லிம், முஸ்னத் முதலிய நூல்கலையும் அவர் தொகுத்தளித்துள்ளார். பிற்காலத்தில் இவர்களது சட்டத் தீர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டே அவர்களின் மாணவர்களான இமாம் அபூ யூசுப் ( ரஹ் ), இமாம் ஸுபைர் ( ரஹ் ), முஹம்மத் ஹசன் ஷைபானி ( ரஹ் ) முதலானோர் ஹனபி மத்ஹபை உருவாக்கினர்.

3.3.2. இமாம் மாலிக் ( ரஹ் ).
    இமாமவர்கள் ஸஹபாக்களையும், தாபிஈன்களையும் சந்தித்தவர் என்பதால் அவர்கள் மூலமும் ஷரீஆ சட்டங்களையும் விளங்கிக் கொண்டார். மதீனாவில் வாழ்ந்த அறிஞர்களிடம் கற்றுக் கொண்டார். இதனால் சிறந்த ஹதீஸ் கலை அறிஞராகவும், பிக்ஹுத் துறை அறிஞராகவும் திகழ்ந்தார்.
    மதீனாவில் வாழ்ந்தமையால் அவர்களுக்கு அநேக ஹதீஸ்கள் கிடைத்தன. அவற்றைக் கற்று மனனமிட்டதோடு மஸ்ஜிதுன் நபவியில் ஹதீஸ் வகுப்பு ஒன்றையும் நடத்தி வந்தார்கள். அவரது வகுப்பு அமைதியாகவும், பக்திபூர்வமாகவும் அமைந்திருந்தது, ஆசிரியர்களும், மாணவர்களும் வுழுச் செய்து, மனம் பூசி வகுப்பில் அமர்ந்தனர். மாணவர்கள் மட்டுமன்றி பொது மக்களும், கலீபாக்களும் கூட அவரது வகுப்பில் கலந்து கொண்டனர். நபி ( ஸல் ) அவர்களின் ஹதீஸ்களுக்கு அவர் மிகுந்த கண்ணியமளித்தார்.

    இமாம் அபூ ஹனீபா ( ரஹ் ) அவர்கள் ஈராக்கில் செய்த பணியை இவர் ஹிஜாஸில் செய்து வந்தார். பிக்ஹு தொடர்பான பிரச்சினைகளுக்கு ஹதீஸ் ஆதாரங்களை வைத்துத் தீர்ப்பு வழங்கினார். தம்மிடம் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு அவர் உடனே பதிலளிக்கமாட்டார். தம்மை விட சிறந்த அறிஞ்சர்களிடம் சென்று தீர்ப்புப் பெறுமாறு அனுப்பி விடுவார். தமக்குத் தெரியவில்லையாயின் வெட்கப்படாமல் அதனை கூறிவிடுவார். அத்தனை பக்தியும் பணிவும் அவர்களிடம் காணப்பட்டன.
   அக்காலத்தில் பிக்ஹு, ஹதீஸ் தொடர்பான கல்வி மக்களுக்கு அவசியமாக இருந்தது. ஆதலால் பிக்ஹு சட்டங்களையும், ஹதீஸ்களையும் உள்ளடக்கியமுவத்தாஎன்ற நூலை தொகுத்தளிதார்கள். இது தவிர வேறு பல நூல்களும் அவரால் எழுதப்பட்டன. அவர் வழங்கிய சட்ட தீர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டே மாலிகி மத்ஹப் உருவானது. இவர்களது சட்டத்தீர்ப்புளை அறிவிப்புச் செய்தோரில் இமாம்களான முஹம்மத் பின் ஹஸன், யஹ்யா அல்லைஸீ, முஸ்ப் அஸ்ஸுபைரீ பிரதானமானவர்கள்.
3.3.3. இமாம் ஷாபிஈ ( ரஹ் ).
    குறைஷிக் குலத்தைச் சார்ந்த இமாமவர்கள் பலஸ்தீனில் பிறந்தார். சிறு வயதில் தந்தையை இழந்த இவர் தாயுடன் மக்கா சென்று தனது மாமாவுடன் வாழ்ந்தார். ஏழு வயதில் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து கொண்டார்.
     கல்வி கற்பதில் ஆர்வம் கொண்ட அவர் கற்பதற்கான வாய்ப்புக்கள் எங்கெல்லாம் காணப்பட்டனவோ அங்கெல்லாம் சென்றார். மக்கா, மதீனா, பக்தாத், எகிப்து என அவரது கல்விப் பயணம் அமைந்தது. மக்காவில் முஸ்லிம் இப்னு காலித் ( ரஹ் ), மதீனாவில் மாலிக் ( ரஹ் ), பக்தாத்தில் இமாம் அபூ யூசுப் ( ரஹ் ) ஆகியோரிடமும் வேறு பலரிடமும் கற்றுக்கொண்டார். இதனால் அவர் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவராகக் காணப்பட்டார்.
     இரவு நேரத்தை மூன்றாக வகுத்து ஒரு பகுதியை அறிவாராய்ச்சிக்கும், மறு பகுதியைத்  தூக்கத்துக்கும், மூன்றாம் பகுதியை இறை வணக்கத்திற்கும் செலவிட்டார். பாடப் போதனை நடாத்திய அதேவேளை, இவர் பல நூல்களையும் எழுதியுள்ளார். அவற்றுள் கிதாபுல் உம்மு, அர்ரிசாலாஹ், முஸ்னத் என்பன பிரசித்தமானவை. இஸ்லாமிய சட்ட திட்டங்களை ( பிக்ஹ் ) ஆராய்ந்தெடுப்பது தொடர்பான உஸுலுல் பிக்ஹ் எனும் துறைக்கு முதன் முதல் உருக்கொடுத்தவராக இவர் பாராட்டப்படுகின்றார். இமாமவர்களது சட்டத் தீர்ப்புகளை வைத்தே ஷாபிஈ மத்ஹப் உருவானது. இவர்களது சட்டத்தீர்ப்புகளை பரவச்செய்த பெருமை இமாம் ரபீஃ, இமாம் முஸனீ ஆகியோரையே சாரும்.
3.3.4. இமாம் அஹ்மத் இப்னு  ஹன்பல் ( ரஹ் ).
    அன்று முஸ்லிம் கிலாபத்தின் தலைநகராக பக்தாத் இருந்தது. அங்கு பிறந்த இமாம் அவர்களுக்கு வேறிடங்களுக்கு சென்று கற்க வேண்டிய தேவை இருக்கவில்லை. எனினும் மக்கா, மதீனா நகரங்களுக்குச் சென்று ஹதீஸ்களைக் கற்றும், மனம் செய்தும் மீண்டார்கள். அவரது ஹதீஸ் தொகுப்பு நூல்முஸ்னத் அஹ்மத்எனப்படுகிறது.
     இமாமவர்கள் அக்காலத்தில் மார்கத் தீர்ப்பு வழங்கிய அறிஞர்களுள் முக்கியமானவராவார். ஹதீஸ் துறையிலும், பிக்ஹுத் துறையிலும் கவனம் செலுத்திய அவர், பிக்ஹுத் துறையின் சமகால தேவையை பூர்த்தி செய்தார். இவரது காலத்தில் பக்தாத், அறிவியல் துறையின் உச்சகட்டத்தை அடைந்திருந்தது. அதே நேரத்தில் பிற கலாசாரத் தாக்கங்களாலும் பாதிக்கப்பட்டிருந்தது. இஸ்லாத்துக்கு முரண்பட்ட கருத்துகளை கலீபாக்களும் அங்கீகரிக்கும் நிலை இருந்தது. இவ்வேளை இமாமவர்கள் சத்தியத்துக்காகப் போராடினார். சிறைவாசமும் கசையடியுமாக அவருக்கு அரசு தண்டனை வழங்கியது.
    பொதுவாக எல்லா இமாம்களும் விவேகமும், அறிவு நுட்பமுடையவர்களாகக் காணப்பட்டார்கள் ஈமானிய உறுதியும், தக்வாவும், நற்குண நல்லொழுக்கங்களும், சத்தியத்துக்காகப் போராடும் பண்பும் அவர்களிடம் நிறைந்திருந்தன. தமது அறிவையும், செல்வத்தையும் அவர்கள் இஸ்லாத்துக்காகவும், முஸ்லீம்களின் நலனுக்காகவும் அர்ப்பணித்தார். இதனால்தான் அவர்களின் வாழ்வும், பணியும் இன்றும் கூட நினைவூட்டப்படுகின்றன. இமாம் அஹ்மத் அவர்களின் ஹதீஸ் அறிவை மக்கள் மத்தயில் பரவச் செய்த பெருமை அவர்களது புதல்வர் அப்துல்லாஹ்வையே சாரும். அவர்கள்தான் தனது தந்தையால் தொகுக்கப்பட்ட முஸ்னதை அறிவிப்புச் செய்தவர்கள். மறுபுறத்தில் அவர்களது பிக்ஹுத்துறைக் கருத்துக்களை மக்களுக்கு அறிவித்த பெருமை அவர்களது மற்றொரு புதல்வர் ஸாலிஹ், மற்றும் இமாமவர்களது சிரேஷ்ட மாணவர் இமாம் அபூ தாவூத் (ஸுனன் அபீதாவூத்தின் ஆசிரியர்) ஆகிய இருவரையுமே சாரும்.

கேள்வி இல 26

புகஹாஉஸ் ஸப்ஆ என்பவர்கள் யாவர்?

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget